சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்...!

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்தியில்,


''சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10, 12-ம் வகுப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு படிக்கும் கிறிஸ்தவம், இஸ்லாம், புத்தம், சீக்கியம், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மை மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.பள்ளி மேற்படிப்பு திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை பெற மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

11 மற்றும் 12-ம் வகுப்ரபு மாணவ, மாணவிகள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31-ம் தேதிக்குள்ளும், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு மாணவ, மாணவிகள் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.உதவித் தொகைகள் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே, வங்கிக் கணக்கு எண், வங்கி குறியீடு எண், ஆதார் எண் ஆகியவற்றை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். உரிய காலத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித் தொகை பெற்று பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.