இந்திய-மே.இ.தீவுகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி மே.இ.தீவுகள் அணியை முதலில் பேட் செய்ய அழைக்க அவர்கள் அசத்தலாக விளையாட 50 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 323 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கை எட்டும் நோக்கில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் தொடக்கமே அதிர்ச்சி காத்திருக்க 2-வது ஓவரிலையே அறிமுக வீரர் தாமஸின் பந்துவீச்சில் ஷிகர் தவண்4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ரோஹித்சர்மாவுடன், கேப்டன் விராட் கோலி இணைந்தார்.
களத்துக்கு வந்தது முதல் விராட் கோலியின் பேட்டில் இருந்து பந்துகள் பவுண்டரிகளுக்கு சென்று கொண்டிருந்தது. மறுமுனையில் ரோஹித் அமைதியாக ஆடினார். அதிரடியாக ஆடிய விராட் கோலி, 35 பந்துகளில் அரைசதத்தை எட்டியதும், வேகத்தை கூட்டிய கோலி விரைவாக சதத்தை அடித்தார். இது அவருக்கு 36 ஆவது சதமாகும். கோலி 140 ரன்களில் ஆட்டமிழக்க அப்படி ராயுடு களமிறங்கினார். தொடர்ந்து அசத்தலாக ஆடி வந்த ரோஹித் தனது 20 ஆவது சதத்தை அடித்தார்.
தொடர்ந்து அதிரடியில் சிக்ஸர்களாக பறக்க, 43 ஆவது ஓவரின் முதல் பந்திலேயே இந்தியா அணி ரோஹித்தின் அற்புதமான சிக்சருடன் வெற்றியை பெற்றது. ரோஹித் 152 ரன்களுடன் களத்தில் இருந்தார். மே.இ.தீவுகள் அணியின் பந்துவீச்சாளராகளை நோகடித்து இந்தியா அணி அசத்தல் வெற்றியை பெற்றது.
