சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.15 கோடியில் புற்றுநோய் கண்டறியும் ‘பெட் ஸ்கேன்’ வசதி !

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.15 கோடியில் புற்றுநோய் கண்டறியும் ‘பெட் ஸ்கேன்’ வசதி செய்யப்பட உள்ளதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.சட்டசபையில் நேற்று

பேரவை விதி எண் 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவு

* குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு பச்சிளம் குழந்தை பராமரிப்பு ‘சிமாங்க்’ மையங்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் பெரும் பங்காற்றி வருகின்றன. ஏற்கனவே இயங்கி வரும் 55 ‘சிமாங்க்’ மையங்களின் மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 64 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றிற்கு 8 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.* தமிழ்நாட்டில், ரத்தம் தேவைப்படும் நபர்களுக்கு போதுமான பாதுகாப்பான தரம் வாய்ந்த ரத்தம் வழங்க அரசு மருத்துவ நிலையங்களில் 87 அரசு ரத்த வங்கிகளும், 363 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 20 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகள் என 40 ரத்த வங்கிகளுக்கு கூடுதல் உபகரணங்கள் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.டயாலிசிஸ் கருவிகள்

* கிராமப்புற மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவை வழங்குவதில், தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை உலக வங்கி உள்ளிட்ட பல அமைப்புகள் பாராட்டி உள்ளன. நடப்பாண்டில், முன்னோடித் திட்டமாக கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 5 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் துவங்கப்படும்.* அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ‘டயாலிசிஸ்’ செய்யும் வசதிகள் உள்ளன. இந்த வசதிகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு, 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 31 இரண்டாம் நிலை மருத்துவமனைகளுக்கு தலா 2 ‘டயாலிசிஸ்’ கருவிகள் 5 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.50 புதிய ஆம்புலன்சுகள்

* மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய 3 மாநகராட்சிகளில் உள்ள 15 நகர்ப்புற சுகாதார மையங்களுக்கும் பெரம்பலூர், பண்ருட்டி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருவாரூர், ஆவடி ஆகிய நகராட்சிகளில் உள்ள 8 நகர்ப்புற சுகாதார மையங்களுக்கும் புதிய கட்டிடங்கள் 5 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டித்தரப்படும். மேலும், கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, ஈரோடு, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய 8 மாநகராட்சிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையங்களாக மேம்படுத்தப்படும்.* தமிழக அரசு செயல்படுத்தி வரும் 108 அவசர கால ஊர்தி சேவை, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றி வருகிறது. எனவே இந்த திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தில் செயல்பட்டு வரும் 50 ஆம்புலன்சுகளுக்கு பதிலாக, 50 புதிய ஆம்புலன்சுகள் 4 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்.முதியோர் பிரிவு

* இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்த அளவாக உள்ளது. கருவுற்ற தாய்மார்களை பிரசவத்திற்கு மருத்துவமனைகளுக்கு அழைத்து வருதல் மற்றும் பிரசவத்திற்குப் பின் அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லுதல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. பிரசவங்கள் அதிக எண்ணிக்கையில் நிகழும் 20 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு 20 புதிய வாகனங்களும்; தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பழனி, திருநெல்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் உள்ள தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் 8 நகரும் மருத்துவக் குழுக்களும் 2 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.* முதியோர் நலனில் எனது தலைமையிலான அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. சென்னை, கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் 126 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் தேசிய முதியோர் நிலையம் அமைக்க கட்டிடப் பணி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் விழுப்புரம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் முதியோர் பிரிவு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.மது போதை மாற்று சிகிச்சை மையங்கள்

* மாவட்ட மனநலத் திட்டம் தற்போது தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் எஞ்சி உள்ள 7 மாவட்டங்களான அரியலூர், நீலகிரி, தஞ்சாவூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கென 6 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.* தற்போது மதுபோதை மாற்று சிகிச்சை மையங்கள் 17 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. காஞ்சீபுரம், திருப்பூர் மற்றும் கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 30 படுக்கைகள் கொண்ட மது போதை மாற்று சிகிச்சை மையங்கள் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.பெட் ஸ்கேன் வசதி

* புற்றுநோய் கண்டறியும் பெட் ஸ்கேன் வசதி 15 கோடி ரூபாய் செலவில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நிறுவப்படும்.* தமிழ்நாட்டில், வட்டார அளவில் செயல்படும் அனைத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டணமில்லா ‘‘அம்மா ஆரோக்கியத் திட்டம்’’ என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ‘‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’’ மற்றும் மகளிருக்கு என்று தனியாக ‘‘அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்’’ தொடங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் நடப்பாண்டில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தப்படும்.விடுதி கட்டிடம்

* இந்திய முறை மருத்துவத்திற்கு எனது தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நடப்பாண்டில் அரசு யோகா மற்றும் இயற்கை வைத்தியக் கல்லூரி மாணவியர்களுக்காக 11 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடம் கட்டப்படும்.* இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் 22 ‘நல மையங்கள்’, 10 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘ஆயுஷ்’ பிரிவு ஏற்படுத்துதல், ஏற்கனவே செயல்பட்டு வரும் 475 ‘ஆயுஷ்’ மருத்துவ நிலையங்களுக்கு நிதி உதவி வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் 19 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.