Vikatan 23 Nov. 2017 12:08
இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்அணிக்கே என தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா - தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்தநிலையில், இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த முடிவு சசிகலா-தினகரன் அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
