ஒரு கோடி ரூபாய் வரையிலான கடன்களை 59 நிமிடங்களில் வழங்குவதற்கான இணையதளத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகப்படுத்தியுள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விரைவில் கடன்களை வழங்குவதற்கு இணையதளம் (போர்டல்) ஒன்றை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகப்படுத்தியுள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரையில் கடன் வழங்குவதற்கு வங்கிகள் ஒப்புதல் அளிக்கும் எனவும், தொழில்முனைவோர் வங்கிக் கிளைகளுக்குச் செல்லவேண்டிய தேவை இருக்காது எனவும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. தொழில் நிறுவனங்கள் அவற்றின் ஜிஎஸ்டி விவரம், வருமான வரி விவரம், வங்கி அறிக்கை போன்ற தகவல்களைச் சமர்ப்பித்து விரைவில் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த இணையதளத்தை இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, விஜயா வங்கி ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. வரும் நாட்களில் இதர வங்கிகளும் இதில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடனுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பித்த பிறகு, அரசு தரப்பில் விவரங்கள் சரிபார்க்கப்படும். ஆன்லைன் கடன் ஒப்புதல்களை ஜிஎஸ்டி மற்றும் வரி ரிட்டன்களுடன் இணைப்பதன் வாயிலாக, அமைப்பு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்குச் சலுகை வழங்குவதற்கு அரசு முயல்கிறது.
