நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை: உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
புது தில்லி: மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற சிபிஎஸ்இயின் சுற்றறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நீட் தேர்வுக்காக விண்ணப்பிப்போர் தங்களது விண்ணப்பத்தில் ஆதார் அட்டையில் இருக்கும் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து வழக்குரைஞர் அபினவ் ஜெயின் என்பவர் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018 நீட் தேர்வுக்கு ஆதார் எண் அவசியம் என்ற சுற்றறிக்கைக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மேலும், தேசிய அளவில் நடைபெறும் எந்த தேர்வுக்கும் ஆதார் எண் அவசியமில்லை என்றும், நீட் தேர்வுக்கு ஆதாருக்கு பதிலாக வேறு ஏதேனும் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களின் ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ நடத்தும் நீட் நுழைவு தேர்வு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 8-ஆம் தேதி முதல் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். மார்ச் 9-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.