தமிழ்நாடு சட்டசபை விதி 110ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது: நான் முதன் முறை முதலமைச்சராக இருந்த போது, அதாவது 1996ம் ஆண்டு, 25 ஆண்டு காலம் அப்பழுக்கற்ற பணியினை முடித்த அரசு ஊழியர்களுக்கு 500 ரூபாய் மதிப்புள்ள இந்திரா விகாஸ் பத்திரம்
வழங்கப்பட்டு வந்தது. பின்னர் இந்திரா விகாஸ் பத்திரத்திற்கு பதிலாக கிசான் விகாஸ் பத்திரம் வழங்கப்பட்டு வந்தது. கிசான் விகாஸ் பத்திரம் வழங்குவதை 1.12.2011 முதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது.
இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு கிசான் விகாஸ் பத்திரத்தை நிறுத்தி விட்டதைக் கருத்தில் கொண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை 15 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டும் இந்தத் தொகையை 500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்திடவும் அதனை ரொக்கமாக வழங்கிடவும் அவர்களது பணியினைப் பாராட்டி அரசு சார்பில் சான்றிதழ் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன். மேலும், தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 5 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட 2,000 ரூபாய் பண்டிகை முன்பணத்தை 5,000 ரூபாயாக உயர்த்திடவும் ஆணையிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.