அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் தலைமையில், 11 பேரை, "சிண்டிகேட்' உறுப்பினர்களாக, தமிழக அரசு நியமித்துள்ளது. இதில், வேலம்மாள் கல்வி குழுமத்தின் தலைவர் முத்துராமலிங்கம், மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரி நிர்வாகி, கருமுத்து கண்ணன் உட்பட பலர், இடம் பெற்றுள்ளனர். முந்தைய ஆட்சியில்,
சென்னை, அண்ணா பல்கலை, ஐந்து பல்கலைகளாக பிரிக்கப்பட்டது. இதனால், அண்ணா பல்கலைக்கு என, தனியாக, "சிண்டிகேட்' தேவையில்லை என, கலைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மீண்டும், ஐந்து பல்கலைகளும், சென்னை, அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மீண்டும், சிண்டிகேட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு, பொறியியல் படிப்பை முடித்த, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பட்டம் வழங்க வேண்டி உள்ளது. இதற்கு, சிண்டிகேட் ஒப்புதல் பெற வேண்டும். இதனால், சிண்டிகேட் அமைத்து, உறுப்பினர்களை நியமித்தும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.