"புளூபிரின்ட்'படி, கேள்விகள் கேட்கவில்லை : சாதாரண மாணவர்களுக்கு, 15 மதிப்பெண்,"கட்' : 10ம் வகுப்பு கணித ஆசிரியர்கள் ஆவேசம்


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த கணித தேர்வில், "புளூபிரின்ட்' (கேள்வித்தாள் அமைப்பு)படி, கேள்விகள் கேட்கவில்லை எனவும், இதனால், சாதாரண மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, 15
மதிப்பெண்கள் வரை, பாதிப்பு ஏற்படும் எனவும், கணித ஆசிரியர்கள், ஆவேசமாக தெரிவித்தனர்.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வு துவங்கியதில் இருந்து, தொடர் குளறுபடிகள் நடந்து வருகின்றன. இதனால், மாணவர்களும், பெற்றோர்களும், அடுத்தடுத்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். 10ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு தேர்வுகளிலும், குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், நேற்று கணிதத் தேர்வு நடந்தது. இந்த தேர்வாவது, குளறுபடி இல்லாமல் நடக்குமா என, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இதிலும் குளறுபடி நடந்து, மாணவர்களை, மேலும் கவலை அடையச் செய்துள்ளது. எந்தெந்த பாடத்தில் இருந்து, எத்தனை கேள்விகள் கேட்கப்படும், எத்தனை மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும் என்பது குறித்து, முன்கூட்டியே அட்டவணை தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
இதுதான், "புளூபிரின்ட்' என, அழைக்கப்படுகிறது. இதில், உள்ள கேள்விகள் அமைப்பின்படியே, காலாண்டு, அரையாண்டு, மாதிரி தேர்வுகள், பொதுத்தேர்வுகள் என, அனைத்திற்கும் கேள்விகள் கேட்க வேண்டும். பொதுத்தேர்வுக்கு சற்று முன் நடந்த மாதிரித் தேர்வுகளில், கணித பாட தேர்வில், "புளூபிரின்ட்' படியே, கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், நேற்று நடந்த மிக முக்கியமான பொதுத் தேர்வில், கேள்வித்தாள் அமைப்பின்படி, பல கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும், இதனால், "ஆவரேஜ்' மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும், கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், கணித ஆசிரியர்கள் குமுறினர். 15 மதிப்பெண்கள் வரை, அவர்களுக்கு இழப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

கணித ஆசிரியர்கள் சரமாரி கேள்வி : ஐந்து மதிப்பெண் கேள்வி பகுதியில், 45வது கேள்வியும், இரண்டு மதிப்பெண் கேள்வி பகுதியில், 30வது கேள்வியும், கட்டாய கேள்விகள். இரு கேள்விகளை கொடுத்து, ஏதாவது ஒரு கேள்விக்கு, மாணவர்கள், கட்டாயம் விடை அளிக்க வேண்டும்.
இந்த நான்கு கேள்விகளும் (தலா 2 கேள்விகள்), முறையே, 2, 3, 5, 8 ஆகிய பாடங்களில் இருந்து கேட்கப்படும் என, "புளூபிரின்ட்'டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பிதாகரஸ்' தேற்றம், தொடுகோடு நாண் தேற்றம் ஆகிய பகுதிகளின் கீழ், "நிரூபணம் இன்றி' என, தரப்பட்டுள்ளது. இந்த பகுதி கேள்விக்கான விடையை எழுதும் போது, சான்று அளிக்க தேவையில்லை. அதன்படி, இந்த பகுதி, இரு மதிப்பெண் கேள்வியில் மட்டுமே கேட்கப்படுகிறது. ஐந்து மதிப்பெண் கேள்வியில், கேட்டது கிடையாது. அதனால், நாங்களும் நடத்தவில்லை.
ஆனால், "பிதாகரஸ் தேற்றம் எழுதி நிரூபி' என, ஐந்து மதிப்பெண் பகுதியில், கட்டாய கேள்வியாக கேட்டுள்ளனர். "புளூபிரின்ட்'படி, இந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது. மாணவர்கள், கோர்ட்டுக்குச் சென்றால், தேர்வுத்துறை, பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பிதாகரஸ் தேற்றம் பகுதிக்கு, சான்று இருப்பதாகவும், இது, ஐந்து மதிப்பெண் பகுதிகளில் இடம்பெறும் என்றும், கடைசிவரை, தேர்வுத்துறை கூறவில்லை. இது, தேர்வுத்துறையின் தவறு. "புளூபிரின்ட்' விதிக்கு மாறாக, கேள்வியை கேட்டுள்ளனர்.
"புளூபிரின்ட்'படி, "கணங்களும், சார்புகளும்' என்ற பாடத்தில் இருந்து, ஐந்து மதிப்பெண் பகுதியில், இரு கேள்விகள் கேட்க வேண்டும். கணங்கள் பகுதியில், 3 பயிற்சிகளும், சார்புகள் பகுதியில், ஒரு பயிற்சியும் உள்ளன. கணங்கள் பகுதி, எளிதானவை. மேலும், அதிக பயிற்சிகள் உள்ள பகுதி. கணங்களில் இருந்து, ஒரு கேள்வியை கூட கேட்காமல், சார்புகள் பகுதியில் இருந்தே, 2 கேள்விகளையும் கேட்டுவிட்டனர்.
இரண்டாவது பாடத்தில் (மெய் எண்களின் தொடர் வரிசைகளும், தொடர்களும்) இருந்து, இரண்டு, ஐந்து மதிப்பெண் கேள்விகள், "புளூபிரின்ட்'படி கேட்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு கேள்விதான் (கேள்வி எண்:33) கேட்டுள்ளனர்.
"அல்ஜீப்ரா' பாடத்தில் (மூன்றாவது பாடம்) இருந்து, மூன்று ஐந்து மதிப்பெண் கேள்விகள் கேட்க வேண்டும். ஆனால், இரண்டு தான் கேட்டுள்ளனர். ஒரு கேள்வியை கேட்கவில்லை.
"அணிகள்' (நான்காவது பாடம்) பாடத்தில் இருந்து, ஐந்து மதிப்பெண் கேள்வியில், ஒரு கேள்வி கேட்க வேண்டும். இதற்கு மாறாக, இரு கேள்விகளை கேட்டுள்ளனர். இதேபோல், "முக்கோணவியல்' (ஏழாவது பாடம்) பாடத்தில் இருந்து, ஒரு ஐந்து மதிப்பெண் கேள்வி கேட்க வேண்டும். இதற்கு மாறாக, இரு கேள்விகளை கேட்டுள்ளனர்.
இப்படி, "புளூபிரின்ட்'டிற்கு மாறாக, பல கேள்விகளை கேட்டதன் மூலம், "ஆவரேஜ்' மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், 15 மதிப்பெண்கள் வரை இழப்பு ஏற்படும்.
இவ்வாறு, கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தேவச்சந்திரன், பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை புழுதிவாக்கம்: உறவினர்கள் சொன்னது போல தேர்வு கடினமாக இல்லை. எளிதாக இருந்தது. கட்டாயம், 70க்கும் அதிகமாக மதிப்பேன் எடுப்பேன். ஆசிரியர்கள் நடத்திய பல கேள்விகள் வினாத்தாளில், அப்படியே இடம் பெற்றிருந்தன.

கவுதம், பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை புழுதிவாக்கம்: வினாத்தாள், 10 சதவீதம் கஷ்டமாக இருந்தது. "புளு பிரின்ட்'டில் இருந்தது போல் கேள்விகள் வரவில்லை. புத்தகத்தில் இல்லாமல், சொந்தமாக சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. வகுப்பில், சராசரியாக படிக்கும் மாணவர்களுக்கு, கணித தேர்வு கஷ்டமாக இருக்கும்.

மந்த்ரா, எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்: கணிதத் தேர்வு எளிதாக இருந்தது. இதுவரை வராத வினாக்கள் இம்முறை கேட்கப்பட்டிருந்தது. என்னுடன் படிக்கும் மாணவியரும், வினாத்தாள் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.

நவீன்குமார், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்: வினாத்தாள் எளிதாக இருந்தது. இரண்டு மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தது. பத்து வினாக்கள் எழுத வேண்டியதற்கு, எட்டு வினாக்கள் மட்டுமே, என்னால் எழுத முடிந்தது.

சங்கீதா, ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம்; அனைத்து கேள்விகளும் ஓரளவிற்கு சுலபமாக இருந்தன. ஆனால், "புளூ பிரின்ட்' வகையில் கேள்விகள் கேட்கப்படவில்லை. 5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. 2 மதிப்பெண் கேள்விகள் ஒன்று சுலபமாகவும், ஒன்று கடினமாகவும் இருந்தது. 10 மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் சுலபமாகவே இருந்தன. பிதாகரஸ் கேட்கப்பட்டது கடினமாக இருந்தது. கணக்கு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெறுவது கடினம்.

சிவபிரகாசம், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம்:
இந்த முறை ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும், புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டதால், அனைத்தும் சுலபமாகவே இருந்தன. இரண்டு பாடத்தில் இருந்து, ஒரு வரைப்படம் கேட்கப்பட்டது. கடந்த முறையை காட்டிலும், இந்த முறை கணக்கு தேர்வு சுலபமாகவே இருந்தது. ஐந்து மதிப்பெண் கேள்விகளில், 37வது கேள்வி ஓரளவிற்கு கடினமாக இருந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...