சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. பாலபாரதி தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறார்.


சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதியின் இந்த நேரடி இணைய அணுகுமுறையை பலர் வரவேற்றுள்ளனர். அதேபோல், கல்வி ஆர்வலர்கள் தங்கள் ஆலோசனைகளைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் வரும் 10-ம் தேதி, பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. பாலபாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ள நிலைத் தகவல்:

"பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கையின் மீது பேச உள்ளேன். விரிந்துபரந்த இத்துறையின் அனுபவமிக்க நண்பர்கள், கல்வியாளர்கள், உங்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, கருத்துக்களைக் பதிவிட்டால் உதவியாக இருக்கும். நன்றி" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அணுகுமுறையை இணைய ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். "இதுபோன்று பரவலாக மக்களின் கருத்தினைக் கேட்டு, சட்டமன்றத்தில் பேசும் சட்டமன்ற உறுப்பினர் தமிழகத்தில் இருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை" என்று ஒருவர் பாராட்டைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், அவரது பக்கத்தில் கல்வி ஆர்வலர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அவற்றுக்கு, பாலபாரதி ரிப்ளை செய்தும் வருகிறார்.

பாலபாரதி எம்.எல்.ஏ.வுக்காக கல்வி ஆர்வலர்கள் பதிந்துள்ள கருத்துகளில் சில:

Barathi Thambi:

* பள்ளிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றக் கோருவது...

* சாதியை குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க சட்டம் வகை செய்கிறது. ஆனால் இது பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை. இதனால் அத்தகைய விருப்பம் உள்ளவர்கள் கூட வேறு வழியின்றி சாதி கட்டத்தை நிரப்ப நேரிடுகிறது. ஆகவே ஒவ்வொரு பள்ளியிலும் இதுகுறித்து வெளிப்படையான அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளியிலும் போதுமான அளவுக்கு கழிப்பறைகள் இருக்க வேண்டும். அதை உத்தரவாதப்படுத்துவது...

Samaththuvan Samaththuvan:

ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் சரியான கழிப்பிடங்கள் இல்லை; பெண்பிள்ளைகள் திறந்தவெளி கழிப்பிடங்களையே பயன்படுத்தும் நிலை உள்ளது. குறிப்பாக கழிப்பிடம் இருந்தாலும் தண்ணீர் வசதி இல்லை. பெண் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தேவையான ஆதாரம் வேண்டுமென்றால், மனமாய் அரசு ஆதிதிராவிட மேனிலை பள்ளியில் ஆய்வு செய்து கொள்ளலாம். அதேபோல இந்தப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை. நன்றாக படிக்கவேண்டிய பிள்ளைகள் எல்லாம் சரியான ஆசிரியர்கள் இல்லாமல் பின்னுக்கு தள்ளபடுகிறார்கள்.

மேலும், கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு குடிசை வீடுகளே பிரதானமாக இருப்பதால் அவர்கள் இரவு நேரங்களில் படிக்க சரியான இடவசதி இல்லை பொது படிப்பகம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Peer Mohamed:
தமிழக அரசு விதித்திருக்கும் அருகாமைப் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இடம் வழங்குவதற்கான விதிகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை, சில இரண்டும்கெட்டான் அம்சங்களை தாங்கள் ஆய்வு செய்து பேசினால் ஏழை வர்க்கத்தின் எதிர்காலம் ஒளிபெறுவதற்கு முதல் படியாக அது அமையும்.

Sukirtha Rani:

1. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மற்றும் பதினோறாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், ஆண்டு முழுத்தேர்வில் தேர்ச்சி தேர்ச்சிபெறவில்லை என்றாலும் 100 சதவீதம் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும் என்பது அரசின் அறிவிக்கப்படாத விதி. தேர்ச்சியை அவ்வாறே அளித்து வருகிறோம். மேற்கூறிய வகுப்புகளுக்கு ஒப்புக்குத்தான் ஆண்டுத்தேர்வு நடைபெறுகிறது. எனவே அவ்வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வு தேவையில்லை.

2. மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். 6 முதல் 8 வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் இடைநிலை ஆசிரியர்கள் நடத்துவார்கள். 9 மற்றும் 10 வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள். தற்போது 6முதல் 10 வகுப்பு வரை தமிழைத்தவிர பிற பாடங்களுக்குப் பாட ஆசிரியர்கள் நியமிக்கப் படுகிறார்கள். ஆனால் தமிழாசிரியர்கள் 9 மற்றும் 10 வகுப்புக்கு மட்டுமே தமிழ் கற்பிக்கிறார்கள். 6 முதல் 8 வரை இடைநிலை ஆசிரியர்களே தமிழ்ப்பாடம் கற்பிக்கலாம் என 6 முதல் 8 வரை ஒரு தமிழாசிரியர் பணியிடம் குறைக்கப்படுகிறது.

உதாரணமாக, எங்கள் பள்ளியில் 6 முதல் 10 வரை 600 மாணவிகள் பயிலுகிறார்கள். 160 ஒரு ஆசிரியர் வீதம் ஆங்கிலம், கணிதம். அறிவியல்,மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கு தலா 3 அந்தந்த பாட ஆசிரியர்கள் வீதமும் தமிழாசிரியர்கள் மட்டும் 2 பேர் வீதமும் நியமிக்கப்படுகிறார்கள். 3 தமிழாசிரியர்கள் இருந்தால் ஒருத்தரை மிகைப்பணியிடம் என்று சொல்லி அவரை வேறு பள்ளிக்கு தூக்கியடித்த அவலம் போன ஜூன் மாதம் நடந்தது. எங்கள் பள்ளியில் 6 முதல் 12 வகுப்புவரை சுமார் 1000 மாணவிகளுக்கு இரண்டே இரண்டு தமிழாசிரியர்கள். எங்கள் பணிச்சுமையும் மன அழுத்தமும் புரிகிறதா தோழர்? எனவே முதுகலைத் தமிழாசிரியர் பணியிடங்களும், மற்ற பாட ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஒப்ப பட்டதாரி தமிழாசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை தொடர்பாக கருத்துகளைப் பதிவுசெய்ய விரும்புவோர் நாடவேண்டிய பாலபாரதி எம்.எல்.ஏ.வின் ஃபேஸ்புக் பக்கம்:

http://www.facebook.com/balabharathi.mla

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...