சான்றிதழ்களை சமர்ப்பிக்காவிட்டால் தேர்வு ரத்தாகிவிடும்: டி.ஆர்.பி., எச்சரிக்கை

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில்,
நேற்று வெளியிடப்பட்டன. "சான்றிதழ் சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால், சம்பந்தப்பட்ட தேர்வர், தகுதியற்றவராக கருதி, நீக்கப்படுவார்" என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
கடந்த ஜூலையில், முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.6 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வின் முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. தமிழ் அல்லாத இதர பாடங்களுக்கு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் விவரமும், சில தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து. ஒரு இடத்திற்கு, ஒருவர் என்ற வீதத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான முகாம், வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கிறது. 32 மாவட்டங்களும், இந்த, 14 இடங்களில் அடங்கும் வகையில், பட்டியல் தயாரிக்கப்பட்டு, இதன் விவரமும், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இருப்பவர்களுக்கான அழைப்பு கடிதங்களும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட தேர்வர்கள், ரோல் எண்களை பதிவு செய்து, தங்களுக்கான அழைப்பு கடிதங்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு, பல கட்டங்களாக நடக்கும். சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், பல கட்டங்களாக மீண்டும், மீண்டும் நடத்தப்படும். ஆனால், இம்முறை அதுபோன்ற வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்றும், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காத தேர்வர்களின் தேர்வு, ரத்தாகிவிடும் என்றும், டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பின் போது, என்னென்ன ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என்ற முழுமையான விவரங்களையும், இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித்துறைக்கு வழங்கிவிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. எனவே, நவம்பர், 10ம் தேதிக்குள், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, 2,200 புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...