கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டத்தில், மாணவர்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதாகக் கூறி, ஆய்வு மாணவர்கள் 3 பேரை நீக்கம் செய்யவும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனவே, இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை. மாணவர்கள் கடந்த புதன்கிழமை முதல் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்நிலையில், ஒரு வாரமாக நடைபெற்ற போராட்டத்தால் புதன்கிழமை முதல் பல்கலை. காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளது. எட்டாவது நாளாக நடைபெற்ற போராட்டத்தின்போது, மாணவர் அமைப்பினர் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
எனவே, பல்கலைக்கழக வளாகத்தில் போராடும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமையல் செய்தபோது, அதைத் தடுத்த 400 பேரை நாகமலைப்புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
நடவடிக்கையை வாபஸ் பெறவேண்டும்
இந்நிலையில், போராட்டத்துக்கு ஆதரவாக பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு சார்பில், பல்கலைக்கழகம் முன்பாக பேராசிரியர் தேன்பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர்கள், ஆய்வு மாணவர்கள் அருண், பாண்டியராஜன், ஈஸ்வரி ஆகியோர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நட வடிக்கைகளை உடனே திரும்பப்பெற வேண்டும். இல்லை யெனில் தமிழகம் தழுவிய அளவில் போராட்டத்தை தீவிரப் படுத்தப்போவதாக அறிவித்தனர்.
ஏற்கெனவே, பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு இந்தப் போராட்டத்தை வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மூலமாக பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லப்போவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.