தமிழ்வழி சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற
பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி வழங்கத் தடையாக இருக்கும் சட்டப்பிரிவு 14ஏ-ஐ
உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள்
மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டமைப்பின் மாநில கோரிக்கை மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசின் நிதியுதவி வழங்கப்படாததால் இந்தப் பள்ளிகளில் பயிலும் சுமார் 8000 ஆசிரியர்கள் அரசு ஊதியமின்றியும், 6.6 லட்சம் மாணவ, மாணவிகள் அரசு சலுகைகளைப் பெற முடியாமலும் அவதிப்பட்டு வருவதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டை கத்தோலிக்க மறைமாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பால்சாமி தொடங்கி வைத்தார்.
சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் சகாயராஜ், தென்மாவட்ட சிறுபான்மையினர் நலப் பேரவையின் செயலர் அருள் சாமுவேல், தமிழ் இலக்கியக் கழக நிர்வாகி எஸ்.எம். இதயதுல்லா, சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர் சங்க மாநிலச் செயலர் பெஸ்கி, தமிழ் வழிப் பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பின் தலைவர் தி.க. பாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்