தேர்தல் எதிரொலியாக, ஏப்ரல், 1ம் தேதி முதல்,
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில், கூலித்தொகை, 148 ரூபாயில் இருந்து, 167
ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது; மேலும், 100 நாள் வேலையை,
150 நாட்களாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின், தேசிய ஊரக
வேலை உறுதி திட்டம், 2005ம் ஆண்டு, ஆக., 25ல்
அமல்படுத்தப்பட்டது. இது, விவசாய பணிகள் இல்லாத காலத்தில், பொதுப் பணிகள்
மேற்கொள்ளும் வகையில், கிராம மக்களுக்கு, 100 நாட்கள், வேலை அளிக்கும்
திட்டமாக கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், நல்ல வரவேற்பு பெற்றதால், 2009,
அக்டோபரில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' என, பெயர்
மாற்றம் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஏப்ரல், 1ம்
தேதி முதல், இத்திட்டத்தில், நாள் கூலித் தொகை, 148 ரூபாயில் இருந்து, 167
ரூபாயாக உயர்த்தி வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 100
நாட்கள் வேலை என்பதை, 150 நாட்களாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி துறை, பி.டி.ஓ., ஒருவர்
கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம், நீர் நிலைகள் தூர்
எடுத்தல், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட, பொது பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
துவக்கத்தில், நாள் கூலி, 80 ரூபாயும்; அதன் பின், 119 ரூபாய், 132 ரூபாய்
என உயர்ந்து, தற்போது, 148 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஏப்ரல்
முதல், 167 ரூபாய் கூலி வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.