பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிக்கான 1500 பணியிடங்கள் காலியாகவே உள்ளதால் திட்ட
பணிகளுக்கான அறிக்கையை தயார் செய்யும் பணி உடனடியாக முடிவடையாமல் தேங்கி உள்ளது. காலி பணியிடத்தை டிஎன்பிஎஸ்சி நிரப்ப நடவடிக்கை எடுக்காததால் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
தமிழகத்தில் பொதுப்பணி துறை கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதன் மூலம் திட்டப்பணிகள் நடைபெறுகிறது. பொதுப்பணித்துறை நிர்வாக பிரிவில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவியாளர், கண்காணிப்பாளர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். இதில், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்கள் மட்டும் 8 ஆயிரம் பேர் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், சில ஆண்டுகளாக இப்பதவியின் கீழ் பணிபுரிந்து வந்த பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால், பொதுப்பணித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவே இருந்தது. இதற்கான காலியிடங்களை நிரப்பக்கோரி டிஎன்பிஎஸ்சியிடம் பொதுப்பணித்துறை தரப்பில் பட்டியல் அளிக்கப்பட்டது. ஆனால், டிஎன்பிஎஸ்சி மூலம் பணியிடங்களுக்கான ஆட்கள் தற்போது வரை நிரப்பப்படவில்லை. இதனால், பொதுப்பணித்துறையில் கடந்த 2 ஆண்டுகளாக இளநிலை உதவியாளர், தட்டச்சர்கள் பதவிக்கான 1500 பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இப்பிரச்னையால் பொதுப்பணித்துறையில் நிர்வாக பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் திட்டப்பணிகள் தயாரிப்பு, டெண்டர் தயாரிப்பு, தகவல் தொடர்பு மற்றும் இதர பணிகள் தொடர்பாக அரசிடம் அறிக்கை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பான பட்டியல் டிஎன்பிஎஸ்சிக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தரப்பில் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி ஆட்களை நியமிக்க வேண்டும். ஆனால், அதை டிஎன்பிஎஸ்சி தரப்பு விரைந்து செய்யாததால் பொதுப்பணித்துறையில் இரண்டு ஆண்டுகளாக 1500 இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையில் அனைத்து மண்டலங்களிலும் பராமரிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட நிர்வாக பணிகளில் திட்ட அறிக்கை தயார் செய்வது உட்பட இதர பணி தேங்கி கிடக்கிறது’ என்றார்.