லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பல்வேறு
ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி,
ஆர்ப்பாட்டம் என, தீவிரம் காட்டி வருகின்றனர். மத்திய இடைநிலை ஆசிரியருக்கு
இணையாக, தமிழக இடைநிலை ஆசிரியருக்கு சம்பளம், பங்களிப்பு ஓய்வூதிய
திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோருவது
உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு ஆசிரியர் சங்கங்கள்
இணைந்து, வரும், 6ம் தேதி,
ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துஉள்ளன. உடற்கல்வி
ஆசிரியர்கள், முதல்வரின், ஸ்ரீரங்கம் தொகுதி யில், போராட்டம் நடத்தப்போவதாக
அறிவித்துள்ளனர். இதேபோல், வேறு சில சங்கத்தினரும், போராட்ட களத்தில்
குதித்துள்ளனர். ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தீவிரம் அடைந்தால், தமிழக
அரசின் கோபத்திற்கு, தாங்கள் ஆளாக நேரிடும் என்பதால், போராட்டத்தை
அடக்குவதற்கான வேலைகளில், கல்வித்துறை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.
இதற்காக, சங்க நிர்வாகிகள் மீது, பாசமழை
பொழிந்து வருகின்றனர். பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், நேற்று,
அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கும், திடீர் அழைப்பு விடுத்து,
அவர்களிடம் நலம் விசாரித்து, பின், அவர்கள் கோரிக்கை குறித்து, பிற்பகல்,
2:30 மணி வரை, பேச்சு நடத்தினார். பட்டதாரி ஆசிரியர் சங்கம், முதுகலை
பட்டதாரி ஆசிரியர் சங்கம், தலைமை ஆசிரியர் சங்கம் என, பல சங்கங்களின்
நிர்வாகிகள், தனித்தனியே, இயக்குனரை சந்தித்தனர். அப்போது, "உங்க கோரிக்கை
எதுவா இருந்தாலும் சொல்லுங்க; அரசின் கவனத்துக்கு கொண்டு போய், உடனே,
தீர்த்து வைச்சுடலாம்' என, ஆரம்பித்து, கோரிக்கை தொடர்பாக, துறை
பணியாளர்களை உடனு குடன் அழைத்து, சங்க நிர்வாகிகள் முன், சீரியசாக
விவாதித்தார். இதனால், கோரிக்கைகள் ஏற்கப்பட்டது போன்ற திருப்தியுடன்,
அலுவலகத்தில் இருந்து, நிர்வாகிகள், நடையை கட்டினர். சில மூத்த
நிர்வாகிகளோ, "தேர்தல் நெருங்குவதால், முதல்வரை திருப்திபடுத்த, அதிகாரிகள்
நடத்தும், அரசியல் ஸ்டண்ட்' எனக்கூறி, நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.