வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக
உயர்த்த வேண்டும் என்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசை மத்திய அரசு
நிராகரித்துவிட்டது. அதே சமயத்தில், வருமானவரி விலக்கு பெறுவதற்கு மூத்த
குடிமக்களுக்கான வயது வரம்பை 60 ஆக குறைத்துள்ளது. மத்திய நிதி மந்திரி
ப.சிதம்பரம் உருவாக்கி உள்ள, திருத்தப்பட்ட நேரடி வரிகள் சட்ட வரைவு மசோதா,
மத்திய நிதி அமைச்சக இணையதளத்தில்நேற்று வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–வருமானவரி
விலக்கு உச்சவரம்பு ரூ.2லட்சமாகவே நீடிக்கும். அதை ரூ.3 லட்சமாக உயர்த்த
முடியாது. அதுபோல், இதர வருமானவரி விகிதங்களையும் மாற்றி அமைக்க
முடியாது.இந்த சிபாரிசுகளை ஏற்றுக்கொண்டால், உத்தேசமாக, ஆண்டுக்கு ரூ.60
ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல்
வருமானம் உடைய தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக்குடும்பங்கள், ‘சூப்பர்
பணக்காரர்கள்’ ஆக கருதப்படுவார்கள். அவர்களுக்கு 35 சதவீத வரி விதிக்க
திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட
சொத்துடைய வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய சட்டங்களுக்குகட்டுப்பட வேண்டி
இருக்கும்.பங்கு பரிவர்த்தனை வரியை கைவிட வேண்டும் என்ற சிபாரிசையும் ஏற்க
முடியாது.அதே சமயத்தில், மூத்த குடிமக்களுக்கான வருமானவரி விலக்கு சலுகையை
பெறுவதற்கான வயது வரம்பு, 65–ல் இருந்து 60 ஆக குறைக்கப்படுகிறது.
இதன்மூலம், அதிகமான மூத்த குடிமக்கள் வருமானவரி சலுகையை
பெறுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த திருத்தப்பட்ட நேரடி
வரிகள் சட்ட வரைவு மசோதா மீது, தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு இறுதி
முடிவு எடுக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.