பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள மாணவர்கள், பத்தாம்
வகுப்பில் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த சான்றிதழை தயார் நிலையில்
வைத்துக்கொள்ள, கோவை மண்டல வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் ஜோதிமணி
அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுகள் வெளியாகும்
நாளன்று மாணவர்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு
செய்யவேண்டி அலைமோதும் நிலை இருந்தது. இதனால் மாணவர்களுக்கும்
வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. இதை
தவிர்க்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு
பதிவு செய்யப்பட்டுவருகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி
வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வரும் 21ம் தேதி
அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
அதபடி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு மே 21 முதல் ஜூன் 4 வரை
நடக்கவுள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் 10ம் வகுப்புக்கான கல்வித் தகுதியை
ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் தற்போது கூடுதல் தகுதிகளை மட்டும் பதிவு
செய்யவேண்டியிருப்பதால் வேலைவாய்ப்பு பதிவு எளிதாக இருக்கும்.
கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு துறை சார்பில்
தலைமையாசிரியர்களுக்கும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள்
வழங்கப்பட்டுள்ளன. கோவை மண்டல வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குநர் ஜோதிமணி
கூறுகையில், கடந்த ஆண்டு பயன்படுத்திய யூசர்-ஐ.டி மற்றும் பாஸ்வோர்ட்
தற்போதும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் என்பதால் முதல்
நாளிலேயே பதட்டத்துடன் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.
பிளஸ் 2 மாணவர்கள் என்பதால் பத்தாம் வகுப்பில்
கல்வித்தகுதியை பதிவு செய்த சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்துக்கொள்வது
அவசியம். சான்றிதழ் தொலைந்த மாணவர்கள் அவரவர் பள்ளிகளை அணுகி பதிவு எண்ணை
தெரிந்து வைத்துக்கொண்டால் போதுமானது. முகவரி உள்ளிட்ட பிற தகவல்களில்
மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் மாணவர்கள் செய்துகொள்ளலாம் என்றார்.