அனைத்து
அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி
அமல்படுத்தப்படும் என்பது. இது கல்வியாளர்கள்
மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் பல்வேறு
விதமான
விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.
முதலில்,
அதிகளவு தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் இதுபோன்ற
நடைமுறை கொண்டுவருவது உண்மையிலேயே ஆச்சர்யமானது என்றாலும் கல்வியை பொறுத்தமட்டில் மதிய
உணவுத் திட்டம் முதல் விலையில்லா
மடிக்கணினி வரை அனைத்திலும் முன்னோடியாய்
திகழ்ந்துகொண்டிருக்கும் தமிழகத்தைப் பொறுத்தவரை, இது காலம் தாழ்த்திய
அறிவிப்பே ஆகும். குஜராத், கர்நாடகம்,
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட பல
மாநிலங்களில் சில ஆண்டுகளுக்கு முன்னரே
செயல்படுத்தத்துவங்கிய அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக்
கல்வித் திட்டம் தமிழகத்தில் கடந்த
ஆண்டுதான் சிந்தனைக்குட்பட்டது. கடந்த ஆண்டு சோதனை
முயற்சி போன்று 160 பள்ளிகளில் துவங்கப்பட்ட இத்திட்டம் இந்த ஆண்டே மாநிலம்
முழுக்க செயல்படுத்தப்பட காரணம் ஒருவகையில் பொதுமக்களிடம்
இதற்கு இருந்த வரவேற்பாகக்கூட இருந்திருக்கலாம்.
ஆனால் எதிர்பார்த்தது போல் தமிழை வைத்து
அரசியல் செய்யும் வித்தகர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு.
உண்மையில்
ஆங்கில மொழி என்பது ஒரு
தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படும் ஒரு
கருவியே ஆகும். உலக மக்களால்
பேசப்படும் ஆயிரக்கணக்கான மொழிகளில் மிகச் சாதாரணமான மொழியே
ஆங்கிலம். ஆனால் கணினி புரட்சியும்
தாரளமயமாக்கப்பட்டச் சந்தை வளர்ச்சியும் தொலைத்
தொடர்பு வசதிகளும் பெரும் வளர்ச்சி கண்ட
பின்னர் உலக மக்களுக்கெல்லாம் இணைப்பு
மொழியாய் ஆங்கிலம் அவசியப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் தன் வீடு தன்
நாடு என இருந்த வட்டம்
விரியத் துவங்கியது. மக்களுக்கு மக்கள் நாட்டுக்கு நாடு
அதிகளவில் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. அதுவரை வெறும் தகவல்
பரிமாற்றத்திற்கு மட்டுமே இருந்த மொழி
எனும் சாதனம் உலகளவில் மக்களை
ஒன்றிணைக்கும் மற்றொரு கருவியாக உருமாறியது.
அதன் எதிரொலிதான் இந்தியா முழுதும் ஆங்கிலம்
குறித்தான விழிப்புணர்வுவை ஏற்படுத்தியது. 2000க்கு பிறகு அநேகமாக
அனைத்து மாநிலங்களிலும் ஆங்கில வழிக் கல்வி
முறை தனியார் கல்வி நிறுவனங்கள்
மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போதும்
நாம் நமது அரசு கல்வி
நிறுவனகள் மூலம் தாய்மொழிக் கல்வித்
திட்டத்தை மட்டுமே செயல்படுத்தி வந்தோம்.
தாய்மொழிக் கல்வி கற்று வரும்,
குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள்
நல்ல மதிப்பெண்கள் பெற்றும் ஆங்கில வழிக் கல்வி
மட்டுமே கொண்ட உயர்கல்விகளில் தொடர்ந்து
தடுமாறியே வருகின்றனர். வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வுகளில் திறமைகள்
இருந்தும் தமிழ் வழியில் கற்ற
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பின்தங்கியே உள்ளது.
ஆங்கிலவழிக்
கல்வி என்பது ஒரு அரசுப்
பள்ளி மாணவனுக்கு வேண்டுமா வேண்டாமா என இந்த ஒரு
கோணத்தில் மட்டுமே இதை அணுகுவோம்.
ஒரு கிராமத்தின் ஒரு ஏழை விவசாயியின்
பிள்ளைக்கு இட ஒதுக்கீடு இருக்கலாம்;
இலவசக் கல்வி இருக்கலாம்; கல்லூரிகளில்
நுழைய சலுகைகளும் உதவித்தொகையும் இருக்கலாம். ஆனால் 7வருட காலம்
நிலைம திருப்புத்திறன் என்றும் கோணவியல் என்றும்
படித்தவன் கல்லூரியில் நுழைந்ததும் Moment of Inertia,
Trigonometry போன்ற வார்த்தைகளை கற்றுக்கொள்ள மட்டும் தன் படிப்புக்காலத்தில்
நான்கில் ஒரு பங்கை செலவழிக்கிறான்.
அதற்குள் அவன் ஒன்றிரண்டு தேர்வுகளில்
தவறி கல்லூரி இறுதியாண்டில், வளாக
நேர்காணலிலோ நேரடி வேலைவாய்ப்பு பெறுவதிலோ
இருக்கும் சிக்கல்கள் வருடத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்டி படிக்கும்
தனியார் பள்ளி மாணவனுக்குத் தெரிவதில்லை.
சென்ற ஆண்டில் கோவையில் மட்டும்
இரண்டு கல்லூரி மாணவர்கள் தற்கொலை-கல்லூரியில் ஆங்கில வழியில் கற்க
முடியவில்லை என்று. ஏழை குடும்பத்தில்
பிறந்து அரசுப் பள்ளியில் பயின்று
நல்ல மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன்
தோற்றுப்போகும் ஒரே இடம் ஆங்கிலம்
என்பது தான் நடைமுறை உண்மை.
இன்றும் அரசுப் பள்ளியில் பயிலும்
தன் மகன் அல்லது மகள்
சிறப்பான மதிப்பெண்கள் பெற்றால் உடனடியாக தன் வருமான வலுவிற்கும்
மீறி அருகிலுள்ள தனியார் பள்ளியில் பயில
வைக்கும் பெற்றோர்களைத் தமிழகம் முழுவதும் காணலாம்
– முதல் காரணம் ஆங்கில வழிக்
கல்வி.
கடந்த
5வருடமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்
சேர்க்கைக் குறைந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமே.
ஆங்கில
வழிக் கல்வி தமிழை அழிக்கும்
முயற்சி என்றே பல்வேறு தலைவர்களால்
பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் இங்கே யாரும்
தமிழ்வழிக் கல்வியை நிறுத்திவிட்டு ஆங்கில
கல்வியை அமல்படுத்துவதாக அறிவிக்கவில்லையே. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
ஆங்கில வழித் திட்டம் ஒரு
விருப்பமுறையாகவே அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர தமிழுக்கு மாற்றாக
அறிவிக்கவில்லையே. எந்த வழி கல்வி
தங்களுக்கு தேவையென்று விருப்பமிருக்கும் மாணவன் அல்லது அவன்
பெற்றோர் தீர்மானிக்கட்டுமே. ஏன் அரசுப் பள்ளி
மாணவனுக்கு மட்டும் தமிழைத் திணிக்க
வேண்டும். இத்திட்டம் குறித்தான செய்தி கேள்விப்பட்டதுமே கூக்குரலிட்டவர்களில்
எத்தனை பேரின் மகன்/மகள்களோ
பேரன்/பேத்திகளோ தமிழ்வழிக் கல்வி பயின்றுவருகின்றனர் என்று
சொல்ல முடியுமா? வசதி படைத்தவர்களின் பிள்ளைகள்
பெறும் கல்வியை ஏழை மக்களின்
குழந்தைகள் பெறுவதற்கு மட்டும் ஏன் இவ்வளவு
எதிர்ப்பு. அரசுப் பள்ளிகளிலும் தரமான
கல்வி தர வேண்டும் என்று
பலகாலமாக பேசிவருபவர்களுக்கு மட்டுமே தெரியும் இதன்
உண்மை. இலவசக்கல்வி நிறுவனங்களாக செயல்படும் இவை தரமான கல்வி
நிறுவனங்களாக மாற்றுவதற்கான முதல் அடியே இத்திட்டம்
எனலாம். ஆனால் வெறும் ஆங்கிலவழி
கல்வி மட்டுமே பெற்றோர்களை அரசுப்
பள்ளிகள் பக்கம் திரும்பிபார்க்க செய்துவிடாது
என கல்வித்துறை அதிகாரிகளும் உணர வேண்டும். நம்மிடம்
ஆங்கிலவழிக் கல்வியை போதிப்பதற்கு தகுதியான
ஆசிரியர்களை உருவாக்க வேண்டியதும் அரசின் உடனடி பணி
ஆகும். கல்வி உரிமைச் சட்டம்,
ஆசிரியர் தகுதித் தேர்வுகள். அரசுப்
பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வித்
திட்டம்… இனி என்ன?… துவங்கட்டும்
கல்வி சீர்திருத்தங்கள்.
- MS ஆனந்தம்