சென்னை ஐகோர்ட்டில், பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாக சங்கத்தின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு
உள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கல்வி கட்டணம்
தமிழக அரசாணைப்படி, சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்பட்டு உள்ளது.
பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. ஆனால் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, 1998–ம் ஆண்டுக்கு முன்பே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான் தற்போது அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மனு மீது நடவடிக்கை
ஆனால் இந்த தொகை எங்கள் கல்லூரிக்கு போதுமானதாக இல்லை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
அதுபோல் சுயநிதி அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளிலும் கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக குழு அமைக்க உத்தரவிட வேண்டும். இதுசம்பந்தமாக கல்லூரி கல்வித் துறை செயலாளர், இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோருக்கு எங்கள் சங்கம் சார்பில் மனு அளித்தோம். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மற்ற கல்லூரிகள் கோரவில்லை
இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆஜரானார்.
அவர் தனது வாதத்தின் போது, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற கல்லூரிகள் மட்டுமே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன என்றும், மற்ற கல்லூரிகள் இதுகுறித்து கோரிக்கை எழுப்பவில்லை என்றும் கூறினார்.
கல்விக்கு தமிழக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்றும், மனுதாரரின் இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசு 6 மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவு செய்யும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
3 மாதங்களுக்குள் குழு
இந்த மனு மீது நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மட்டும் உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமாக அமையாது.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான குழுவை இன்னும் 3 மாதங்களுக்குள் நியமிக்க உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது