தினம்தினம் வாழ்க்கை போராட்டம் தனியார் பள்ளி ஆசிரியர்களின் அவலம்...!

குறைந்த சம்பளம் பிழிந்தெடுக்கும் வேலை டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் நாட்டில் பெரும்பாலான ஆசிரியர்கள் நிறைவான சம்பளம் பெறவில்லை என்ற குறை காலங்காலமாக நீடித்து வருகிறது. அதேபோல ஆசிரியர் பணிக்காக படித்தவர்கள் ஆசிரியர் பணி பெறுவதிலும் பல்வேறு தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். நாட்டில் அரசுப் பள்ளிகளில் சுமார் 55 லட்சம் ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளில் 42 லட்சம்
ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். அரசு பள்ளிகளில் தற்போது பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு பென்ஷன் கிடையாது. தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பல பேர் குறைந்த சம்பளத்துக்கே பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். நாட்டில் 42 லட்சம் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். அரசுப் பள்ளிகளில் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்கள் மாதம் ஒன்றுக்கு 15000 தொடக்க சம்பளம் பெறுகின்றனர். பட்டதாரி ஆசிரியர்கள் 26000 சம்பளம் பெறுகின்றனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 26200 என்று சம்பளம் பெறுகின்றனர். ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலையோ பரிதாபம். இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: முன் அனுபவம் இல்லை என்றால் சம்பளம் குறைவாகத்தான் பெற வேண்டும். அனுபவம் பெற்ற ஆசிரியர்களை பொருத்தவரை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு 20 ஆயிரம் தொடக்க சம்பளம், 9, 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 15000, 8ம் வகுப்பு வரை எடுத்தால்10000 சம்பளம். நர்சரி வகுப்புகளுக்கு பாடம் நடத்த வரும் ஆசிரியர்கள் என்றால் 2000 முதல் 5000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படி தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் வேதனை தரும் விஷயம் என்னவென்றால், பாதிக்குப்பாதி ஆசிரியர்கள் மிகக்குறைந்த அளவே சம்பளம் பெற்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 10 மணி நேரமாவது வேலை செய்தாக வேண்டும். விடுமுறை என்பது முறையாக கிடைக்காது. அந்த அளவுக்கு தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை கசக்கி பிழிந்து வருகின்றன. தனியார் பள்ளிகள் காலையில் 8 மணிக்கே தொடங்கிவிடும். அதற்கு முன்னதாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துவிட வேண்டும். ஒரு ஆசிரியருக்கு குறைந்தபட்சம் 8 பாட வேளை ஒதுக்கப்படும். மாலையில் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தில் சரியாக கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. தனியார் பள்ளிகளியில் சேரும் ஆசிரியர்கள் திறமைக்கு ஏற்றார்போலத்தான் சம்பள உயர்வு கிடைக்கும். சுமார் ரகம் என்று நிர்வாகம் முத்திரை குத்திவிட்டால் அவர் கடைசி வரை சம்பள உயர்வை பார்க்கவே முடியாது. தற்போதுள்ள சூழ்நிலையில் மாதம் ஒன்றுக்கு ஒரு ஆசிரியர் 25000 சம்பளம் பெற்றால்தான் குடும்பத்தை நகர்த்த முடியும். இடைநிலை ஆசிரியர் தகுதி பெற்ற ஒருவர் பணியில் சேரும் போது முதலில் நர்சரி குழைந்தைகளுக்கு பாடம் நடத்தவே நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாதம் 2000 முதல்5000 ஆயிரம் கொடுத்தால் அவர் எப்படி குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியும். குடும்பத்தில் வயதானவர்கள் இருந்தால் அவர்களை கவனிக்க வேண்டும். குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு என்று பல்வேறு நிதிப் பிரச்னைகளை சமாளிக்க வேண்டும். இதனால் பல குடும்பங்கள் போதிய வருவாய் இன்றி தவித்து வருகின்றன. குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் ஆசிரியர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. பேறு கால விடுப்பு கிடைக்காது. குழந்தையை கவனிக்க முடியாது. அதனால் குழந்தை பெறுவதையே தள்ளிப் போட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தவர்கள் முழுக்க முழுக்க குடும்பத்தை சுமக்க வேண்டியதாகிறது. அப்படிப்பட்ட சூழலில் குறைந்த சம்பளம் எப்படி ஒரு குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கும். இதனால் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டி வருகிறது. கடன் சுமை எகிறும்போது சமாளிக்க முடியாமல் மன ரீதியாக பாதிக்கப்படுகிறோம். ஒரு புறம் குடும்பம், ஒரு புறம் பள்ளி நிர்வாகத்தின் நெருக்கடி இதனால் பல ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில பள்ளி நிர்வாகங்கள் அதிக சம்பளம் கொடுப்பதாக எழுதி வாங்கிக் கொண்டு குறைந்த அளவே சம்பளம் தருகின்றனர். காரணம் கேட்டால் குறைந்த அளவே மாணவர்கள் படிக்கின்றனர். வருவாய் இல்லை என்று கூறுகின்றனர். இல்லை என்றால் வேலையில் இருந்தே வெளியேற்றி விடுகின்றனர். இதனால் பல ஆசிரியர்கள் மவுனமாகவும், மனஉளைச்சலுடனும் வேலை செய்து வருகிறோம். இவ்வாறு அந்த ஆசிரியர்கள் கூறினர். இது குறித்து தனியார் பள்ளிகள் நடத்தும் நிர்வாகிகளிடம் கேட்டபோது, தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு கட்டண நிர்ணயக் குழு அமைத்து பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து, இவ்வளவுதான் வாங்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மாணவர்கள் சேர்கின்றனர், கல்விக் கட்டணம் எவ்வளவு வசூலாகிறது என்பதை பொருத்துத்தான் நாங்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். குறைவான மாணவர்களை வைத்துக் கொண்டு, வருவாய் இல்லாத நிலையில் அதிக சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. மாணவர் சேர்க்கையில் ஒரு வகுப்புக்கு இவ்வளவுதான் சேர்க்க வேண்டும் என்றும், ஒரு வகுப்பில் இத்தனை பிரிவுகள்தான் இருக்க வேண்டும் என்றும் கல்வித்துறை நெருக்கடி கொடுப்பதால் பள்ளிக்கு வருவாயிலும் துண்டுவிழுகிறது. இதனால் ஆசிரியர்களுக்கு போதிய சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது என்று தெரிவித்தனர். எப்படி இருந்தபோதும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நிலை வேதனைக்குரியதாகத்தான் இருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...