இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பழம்பெருமை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகம் புதுப்பிக்கப்பட்டு, வேகமான செயல்பாட்டுக்கு கொண்டு வர, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தீர்மானிக்கப்பட்டதில் தவறில்லை. ஆனால், அந்த மதிப்புமிகு பல்கலையின் வேந்தராக, அமர்த்தியா சென்னை நியமித்ததுதான் தவறு.
நாளந்தா பல்கலைப் போன்ற ஒரு சிறப்பு வாய்ந்த பல்கலைக் கழகம், இந்தியாவைக் கடந்தும் தன் பணிகளை செய்து வருவதால், அந்த பல்கலையின் வேந்தராக நியமிக்கப்படுகிறவர், முழு நேரமும், பல்கலையின் தலைமையிடம் உள்ள பீகாரிலேயே இருந்து பணியாற்றுபவராக இருந்திருக்க வேண்டும்.
ஆனால், அமர்த்தியா சென், பல்கலையின் வேந்தராக பணியாற்றிய காலம் முழுவதும், ஒரு பகுதி நேர பணியாளரைப் போலத்தான், கடைசி வரையில் பணியாற்றினார். ஆனால், அரசு கொட்டிக் கொடுத்த நிதியை மட்டும் தவறாகப் பயன்படுத்தி, தன்னையும் தன் நட்பு வட்டத்தில் இருப்பவர்களையும் வளம் கொழிக்க செய்து விட்டார்.
நிதி ஆதாரம்
அந்த வகையில்தான், பல்கலைக்கு ஏற்படுத்தப்பட்ட நிதி ஆதாரம், சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை; முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்திலேயே, இந்த பொருளாதார மேதையின் நிர்வாகம் சரியில்லை என, நான் அரசுக்கு தகவல் அளித்தேன்; தவறுகளை முறையாக விசாரிக்கக் கேட்டுக் கொண்டேன்.
அதன்பின்தான், மத்திய அரசு, பல்கலையின் நிர்வாக நடைமுறைகளிலும், நிதி கையாளப்பட்ட விதத்தையும் முழுமையாக ஆய்வு செய்தது. ஆனால், அதை எதிர்த்து கூக்குரலிட்ட அமர்தியா சென், தன் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என, அப்போதைய அரசை மிரட்டினார். ஆனால், மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை என்றதும், அப்படியே அமைதியாகி விட்டார். இருந்தாலும், பல்கலையின் நிதியை தவறாக பயன்படுத்துவதில் இருந்து அவர் ஓயவில்லை. தொடர்ந்து தவறு மேல் தவறு செய்தபடி இருந்தார்.
நியமனம்
டில்லி, ஸ்ரீராம் கல்லுாரியில் துணை பேராசிரியராக இருந்த கோபா சபர்வால் என்ற பெண்ணை, பல்கலையின் துணைவேந்தராக நியமித்தார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். சபர்வாலின் தோழியான அஞ்சனா சர்மாவை, ஆபீசர் ஆன் ஸ்பெஷல் டியூட்டி பொறுப்பில் நியமித்தார்; அவருக்கும் சம்பளம் வாரி வழங்கப்பட்டது. இப்படி ஏராளமான பணியிடங்கள் நாளந்தா பல்கலையில், விதிகளை கடைபிடிக்காமல் போடப்பட்டுள்ளன.
இதனால், பல்கலையின் நிதி தாறுமாறாக செலவழிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலேயே சர்வ சதா காலமும் இருக்கும் அமர்த்தியா சென், நாளந்தா பல்கலையில் பணியாற்றிய காலத்தில், எத்தனை நாட்கள் இந்தியாவில் இருந்தார் என தெரிவிக்க வேண்டும்.
அப்படி வெளிப்படையாக சொன்னால், அதை வைத்தே, அவர் பல்கலைக்கு வாங்கிய சம்பளத்திற்கு உழைக்கவில்லை என்பதை வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம். அவர் தனக்காக இதுவரையில் செலவழித்த பல்கலையின் நிதி எவ்வளவு என்பதையும் சொல்ல வேண்டும். அந்த செலவுகள் முறையானது தானா? என்று விசாரிக்க வேண்டும்.
பல்கலைக்காக முழு நேரம் உழைக்காமல், உலகை இலவசமாக சுற்றுவதற்கென்றும், அப்போதைய அரசில், ஒரு ஏற்பாட்டை செய்து கொடுத்திருந்தனர். அதாவது, ஏர் - இந்தியா நிறுவனம் எங்கெல்லாம் தன் விமான சேவையை செயல்படுத்துகிறதோ, அங்கெல்லாம், பல்கலையின் வேந்தர் என்ற முறையில் சென், இலவசமாகவே, பிசினஸ் கிளாசில் சென்று வர முடியும்.
முறைகேடு
இப்படி, பல்கலையின் வேந்தர் என்ற முறையில், நிறைய அதிகாரங்களையும், சலுகைகளையும் அரசு தரப்பில் வழங்கியதை, அவர் தவறாகவே பயன்படுத்தினார். பல்கலையில், 2,000 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக முறைகேடு நடந்திருப்பதாக, மத்திய கணக்குத் தணிக்கை துறை கூறியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. இப்படித்தான், 2ஜி வழக்கிலும், கணக்குத் தணிக்கைத் துறை, முறைகேடு குறித்து தகவல் சொல்லி, அது இந்தியாவையே உலுக்கும் வழக்காகி இருக்கிறது.
ஆக, நாளந்தா பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்தும், மத்திய அரசு விசாரிக்க வேண்டும். தேவையானால், சி.பி.ஐ., விசாரணைக்கும் விடலாம். இதைக் கேட்டுத்தான், பிரதமருக்கு ஏற்கனவே, மூன்று முறை கடிதம் அனுப்பி இருக்கிறேன். அதில் நடவடிக்கை வந்துவிடும் என்று அஞ்சி, பதவியில் இருந்து கழன்று கொள்ள நினைக்கிறார் சென்.
கலாம் அதிருப்தி
பல்கலையின், மென்ட்டர் பொறுப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு, பல்கலைக்கழக செயல்பாடுகளில் தனக்கு இருந்த அதிருப்தியை கடிதமாக எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தைப் பார்த்தாலே, பல்கலையின் தவறுகளை புரிந்து கொள்ள முடியும். இடதுசாரி சிந்தனையுள்ள அமர்த்தியா சென், இனி ஒரு நிமிடம் கூட நாளந்தா பல்கலையின் வேந்தராக இருக்கக் கூடாது. மீறி அனுமதித்தால், அது நாட்டுக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.