சென்னை, மாநில கல்லுாரியில் நடந்த, கண் பரிசோதனை முகாமில், ஊட்டச்சத்து குறைபாட்டால், மாணவர்களுக்கு பார்வை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
சென்னை மாநில கல்லுாரி, ரோட்டராக்ட் சங்கம், சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து, கண் பரிசோதனை முகாம் நடத்தின. அதில், 264 மாணவர்கள், பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில், 23 மாணவர்கள், குறிப்பிட்ட தொலைவில் புத்தகங்களை வைத்து படிப்பதில் சிரமப்பட்டனர். அவர்களுக்கு, கண்ணாடி அணியும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கண்ணாடிகளை இலவசமாக வழங்குவதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது: இன்று பலர், சத்தான உணவை உட்கொள்வதில்லை. குறிப்பாக, கேரட், முட்டை, பால், கீரை வகைகளை தவிர்க்கின்றனர். அதனால், கண் நரம்புகள் பலவீனமடைகின்றன. நாளடைவில், பார்வை குறைபாட்டுக்கு ஆளாகின்றனர். அதனால், மாணவ பருவத்தில் ஊட்டச்சத்திலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். யோகா, சூரிய நமஸ்காரம் உள்ளிட்டவற்றை செய்தால், கண்களுக்கு ரத்த ஒட்டம் சீராகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்