உரிமையியல் நீதிபதி பணிக்கான நேர்காணல் தேர்வு வருகிற 15ம் தேதி நடைபெறும்.
10.5 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு ரிசல்ட் இம்மாத இறுதியில்
வெளியிடப் படும் என்று டி.என்.பி. எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியன்
தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணி யன் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-4
பதவியில் காலியாக உள்ள 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து
தேர்வு டிசம்பர் 21ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 10.5 லட்சம் பேர்
எழுதினர்.
இத்தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் ரிசல்ட் வெளியிட நடவடிக்கை
எடுக்கப்படும்.2012ம் ஆண்டு ஆக ஸ்ட் 26ம் தேதி மோட்டார் வாகன ஆய்வாளர்
தேர்வு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேர்முக தேர்வு நடந்தது. இந்த
நிலையில், ஆய்வாளர் தேர்வையும், நேர்முக முடிவுகளையும் ரத்து செய்ய கோரி
மதுரை கோர்ட்டில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள்
அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், இந்த தேர்வுக்கான ரிசல்ட்டும்
விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநில நீதித்துறையில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் 162 காலி பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 1 மற்றும் 2ம் தேதி நடத்தப்பட்டது. இதில், 590 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். இதில் 341 பேர் நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 15ம் தேதி முதல் சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும். மேலும், இந்தாண்டு கூடுதல் காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கான பட்டியலை தேர்வு செய்து தருமாறு அரசு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசிடம் இருந்து பட்டியல் கிடைத்தவுடன் உடனடியாக காலி பணியிடங்கள் நிரப்பப்படும். டிஎன்பிஎஸ்சியின் நம்பகத்தன்மையால் எல்காட் நிறுவனம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் எங்களை நேரடியாக நாடி வருகின்றனர். தன்னிச்சையாக தேர்வுகளை நடத்த முடியாது என்று டிஎன்பிஎஸ்சி அவர்களை கேட்டு கொண்டுள்ளது. மேலும், ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய முறையை கொண்டு வந்தது போல, தேர்வுகளை எளிதாக எழுதும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கையை டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டுள்ளது. இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.