ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகள் அரசால்
ஏற்கப்படாததால் தமிழக சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த சத்துணவு
பணியாளர்கள் நாளைமுதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்த வேலை நிறுத்த அறிவிப்பு கடிதம், கோரிக்கைகள் அரசுக்கு பிப்ரவரி
18ம் தேதி வழங்கப்பட்டது. அதில் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவால்
அங்கீகரிக்கப்பட்ட ஊதியமாக அமைப்பாளர்களுக்கு ரூ.5,200 மற்றும் சமையலர்,
சமையல் உதவியாளருக்கு ரூ.4,800-ம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களாக
பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.1000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதை
ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி
யுறுத்தப்பட்டன.
இதையடுத்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சமூக நலத்துறை அதிகாரிகள்
பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். நேற்று காலை சென்னை தலைமைச் செயலகம் வந்த
சத்துணவு ஊழியர் சங்கம் உள்ளிட்ட 10 சங்கங்களை சேர்ந்தவர்கள் முதலில் துறை
செயலர் பஷீர் அகமதுவை சந்தித்து பேசினர். அதன் பின் உயர்கல்வி அமைச்சர்
பழனியப்பன், பள்ளிக் கல்வி அமைச்சர் வீரமணி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்
வளர்மதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை முடிவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை தவிர இதர
சங்கங்கள் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்து சென்றனர். தமிழ்நாடு
சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் மீண்டும் கூடி முடிவை அறிவிப்பதாக
தெரிவித்தனர்.
நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் சுந்தரம்
மாள் இதுகுறித்து கூறும்போது, ‘‘நிர்வாக தரப்பில் 12 கோரிக்கை கள்
நிறைவேறும் என அறி வித்தனர். ஆனால் முக்கிய கோரிக்கைகளான ஊதிய உயர்வு
மற்றும் ஓய்வூதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்படாததால் அறிவித்தபடி வேலை
நிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளோம்’’ என்றார்.
கருணாநிதி அறிவிப்பு
சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு திமுக ஆதரவளிக்கும் என
அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 15 (நாளை) முதல்
நடைபெறவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்
என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் எனக்கு கடிதம்
வந்துள்ளது.
அவர்களின் இந்தப் போராட்டத் துக்கு திமுக ஆதரவளிக்கும் என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.