தமிழகத்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் உள்ளன.
வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வு, மாவட்ட வாரியாக,
கடந்தாண்டு மே 7ம் தேதி துவக்கினர்.
ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 25 சதவீதம் பள்ளி வாகனங்களில்
ஆய்வு முடிக்கப்படவில்லை. பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பும், வாகன ஆய்வு
தொடர்ந்தது. தகுதி சான்றிதழ் மறுக்கப்பட்ட, 1,280 பள்ளி வாகனங்களை இயக்க
முடியவில்லை. இதனால், பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் வாகனங்களில் செல்வதில்
சிக்கல் ஏற்பட்டது. மேலும், 2,000த்திற்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள்
ஆய்வுக்கே கொண்டு வரப்படாமல் இருந்தன. ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்கள்
குறித்து, பள்ளி நிர்வாகத்திற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில்
கடிதம் மூலம் விவரம் தெரிவித்ததோடு, அப்பிரச்னையை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதனால், தகுதி சான்றிதழ் பெறாத பல வாகனங்களை இயக்கியிருக்கலாம் என, கருத
வேண்டி உள்ளது. சமீபத்தில், 'பள்ளி வாகன ஆய்வில், போக்குவரத்து மற்றும்
போலீஸ் துறையினர் அரிதாகவே செயல்படுகின்றனர். அவ்வப்போது பள்ளி வாகனங்களை
ஆய்வு செய்து, விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை அறிய வேண்டும்' என,
சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தாண்டு,
பள்ளி வாகனங்களின் ஆய்வை முன் கூட்டியே முடிக்கத் திட்டமிட்டு உள்ளோம்.
பள்ளிகளில் கோடை விடுமுறை விட்ட சில நாட்களிலேயே, வாகன ஆய்வை துவக்க
உள்ளோம். மே மாதத்திற்குள் வாகன ஆய்வை முடிக்கும் வகையில், ஆய்வு பணி
மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
ஆய்வில் நடப்பது என்ன? படிக்கட்டு, அவசரகால கதவு, டயர்கள், முதலுதவி
பெட்டி, தீயணைப்பு கருவிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட
பாதுகாப்பு அம்சங்கள், வாகனங்களில் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது
குறித்தும், ஓட்டுனர் உடல் தகுதி மற்றும் உதவியாளர் நிலை குறித்தும்,
போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வர்.