இரு சக்கர வாகனங்களில் பின்புறம் பயணிப்போருக்கும் தலைக்கவசம் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, பின்புறம் பயணிப்போருக்கும் தலைக்கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 1 முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 இதுகுறித்த அறிவிப்பை மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா புதன்கிழமை வெளியிட்டார். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டை அதிகரிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார்.
 அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில், ஜூலை 1- ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும், இதற்கான அறிவிப்பை ஜூன் 18 ஆம் தேதிக்கு முன்பாக பொது மக்களுக்கு உள்துறைச் செயலாளரும், மாநில காவல் துறைத் தலைவரும் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
 பயணிப்பவருக்கும் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஜூன் 18- ஆம் தேதிக்குள் தலைக்கவசம் குறித்த உத்தரவை பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால் அதுகுறித்த அறிவிப்பை உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா புதன்கிழமை (ஜூன் 17) வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
 ஜூலை 1 முதல் இரு சக்கர வாகன ஓட்டுநரும், பின்புறம் பயணிப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். தவறும்பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 206-ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள், ஓட்டுநரின் உரிமம் ஆகியன பறிமுதல் செய்யப்படும்.
 இந்திய தர நிர்ணயச் சான்று பெற்ற புதிய தலைக்கவசம், அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றைக் காண்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும் என்று தனது அறிவிப்பில் உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...