இந்திய பெருங்கடலில் அடுத்து வரும் புயல் 'மாருதா' : பெயரிடுவது எப்படி என தகவல்!!

வர்தா' புயலின் பாதிப்பால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, புயலுக்கு பெயர் வந்தது எப்படி என, விவாதித்து வருகின்றனர். இந்திய பெருங்கடல் பகுதியில், அடுத்து வரும் புயலுக்கு, 'மாருதா' என்ற, பெயர் தேர்வாகியுள்ளது.




சர்வதேச அளவில், புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம், 1953ல், அட்லாண்டிக் கடற்பகுதியில் துவங்கியது. உலக வானிலை அமைப்பு மூலம் கடல்களின் அடிப்படையில், 10 வகை பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன.கரீபியன் கடல், வடக்கு மெக்சிகோ, வடகிழக்கு பசிபிக் பெருங்கடல், வடக்கு அட்லாண்டிக், மத்திய வடக்கு பசிபிக், வடமேற்கு பசிபிக், தென் சீனக் கடல், ஆஸ்திரேலியா, வட இந்திய பெருங்கடல், தென் மேற்கு இந்திய பெருங்கடல் போன்றவற்றை சார்ந்த நாடுகளை இணைத்து, பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

46 பெயர்கள்




வட இந்திய பெருங்கடலின் பட்டியலில், இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், மாலத்தீவு, ஏமன், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளின் சார்பில், 2014ல், ஒவ்வொரு நாடும், தலா எட்டு வீதம், 64 பெயர்களை பதிவு செய்துள்ளன. இதுவரை, 46 பெயர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.வட
இந்தியபெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு, ஆங்கில எழுத்துகளின், ஏ, பி, சி, அகர வரிசையில், முதலில், பங்களாதேஷ் என்ற வங்கதேசம் வழங்கிய பெயர் வைக்கப்படும். பின், முறையே இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, கடைசியில், தாய்லாந்து நாடு வழங்கிய பெயர் வைக்கப்படும்.

நடப்பு வடகிழக்கு பருவமழை



கடந்த ஆண்டின் கடைசி புயலுக்கு, இந்தியா வழங்கிய, 'மேக்' என்ற, மேகம் பெயர் வைக்கப்பட்டது.

இந்த ஆண்டு, தென் மேற்கு பருவமழை காலத்தில், மே மாதம் உருவான முதல் புயலுக்கு, மாலத்தீவு வைத்த, 'ரோனு' என்ற பெயர் சூட்டப்பட்டது.தொடர்ந்து, நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான முதல் புயலுக்கு மியான்மரின், 'மொன்' மொழியில், முதலை என்றபொருளில், 'கியான்ட்' என்ற பெயர் சூட்டப்பட்டது.

இந்த புயல், மியான்மரை தாக்கியது. பின், நவ., 29ல், உருவான அடுத்த புயலுக்கு, ஓமன் நாடு வழங்கிய, 'நடா' என்ற அரபி மொழி பெயர் வைக்கப்பட்டது.


'ரோஜா மலர்'


இதற்கு, ஆசீர்வதிக்கப்பட்ட மழைத்துளி என்று பொருள். இந்த புயல், டிச., 1ல், காரைக்கால் அருகே கரையை கடந்து, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு பரவலாக மழையை கொடுத்து, பெயருக்கு ஏற்ப ஆசீர்வதிக்கப்பட்ட மழையாய், அரபிக்கடலில் தஞ்சமானது.அதன்பின் உருவானதே, நேற்று முன்தினம் ருத்ரதாண்டவம் ஆடிய, 'வர்தா' புயல். பாகிஸ்தான் சூட்டிய இந்த பெயருக்கு, அரபி மொழியில், 'ரோஜா மலர்' என, அர்த்தம். இது, டிச., 6ல் உருவாகி, 12ல் கரையை கடந்தது. இந்திய பெருங்கடலில், அடுத்து உருவாக உள்ள புயலுக்கு, இலங்கை வழங்கிய, 'மாருதா' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்தியா சார்பில், 50வது பெயராக, கடல் என, பொருள்படும், 'சாகர்'; 58வது பெயராக, காற்று என்ற அர்த்தம் தரும், 'வாயு' என்ற, இந்தி பெயர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

நிஷா...நிலா..நீலம்...வர்தா!


இந்தியாவில் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004ல் அறிமுகமானது. தமிழகத்தை தாக்கி, பெரும் சேதம் ஏற்படுத்திய சில புயல்கள்.
* 1994 அக். 31: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புயல், சென்னை-- கடலுார் இடையே 115 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு, தமிழகத்தில் 26 பேர் பலி. புயல் கரையைக் கடந்த பின்பும் 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
* 2008: நவ.26: வங்கக்கடலில் உருவான நிஷா புயல், நாகபட்டினம் - காரைக்கால் இடையே கரையைக் கடந்தது. மணிக்கு 75 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இந்த புயலால் 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
* 2010 : ஜல் புயல், சென்னை அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
* 2011 டிச. 31 : புதுச்சேரிக்கும், கடலுாருக்கும் இடையே, தானே புயல் கரையைக் கடந்தது. அதிகபட்சமாக மணிக்கு 135 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. கடலுார் பெரிதும் பாதிக்கப்பட்டது. 39 பேர் பலியாகினர். பலர் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்தன. 1,500 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டது.
* 2012 அக்.31: வங்கக்கடலில் உருவான நீலம் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. சுமார் 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது.
* 2016 டிச. 12: வங்கக்கடலில் உருவானவர்தா புயல் அதி தீவிர புயலாக மாறி சென்னை அருகே கரையைக் கடைந்தது. 100 கி.மீ., மேல் காற்று வீசியது. 18 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரம் மின்கம்பிகள் சேதமடைந்தன. 1000 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...