கடந்த ஃபிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் , ஆண்டிற்கு இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கான வருமான வரி 10
சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதனுடன் சேர்த்து, ஆண்டிற்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கான கூடுதல் வரி 10 சதவீதமும், ஒரு கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டுவோருக்கான கூடுதல் வரி 15 சதவீதமும் உயர்த்தப்பட்டது.
மேலும், மாற்றியமைக்கப்பட்ட வர்த்தக வரி, டிடிஎஸ் பிடிப்பில் மாற்றம், வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் அவசியம் உட்பட 10 விதிகள் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இந்த 10 விதி மாற்றங்களும் அடுத்த மாதம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தற்போது தெரிவித்துள்ளார்.
ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வரவுள்ளது. ஜிஎஸ்டி-யால் மறைமுக வரிகள் மட்டுமே தளர்த்தப்படும் என்பதால், வருமான வரியில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.