கிராமத்து மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள் நீட் தேர்வில் விலக்கு கேட்பது அவமானமாக இல்லையா?

சென்னை  கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த திவ்யா ஷாரோனா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

முதுநிலை மருத்துவ படிப்பிற்காக நீட் எனப்படும் தகுதி தேர்வில் நான் அதிக   மதிப்பெண்கள்
எடுத்துள்ளேன். அரசுக்கான இடங்களை தனியார் கல்வி நிறுவனங்கள் தாங்களே நிரப்பிக் கொள்வதால் என்னைப்  போல் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதனை முறையாக அமல்படுத்த தமிழக அரசுக்கும் உரிய இடங்களை அளிக்க தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு  நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று நீதிபதி கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி ஆஜராகி வாதாடினார். மனுதாரர் சார்பாக வக்கீல் ஜி.சங்கரன் ஆஜராகி வாதாடினார்.

தனியார் கல்லூரிகள் சார்பாக மூத்த வக்கீல்கள் சோமையாஜி உள்பட பலர் ஆஜராகி வாதாடினார்கள். அப்போது நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில்  கூறியிருப்பதாவது:  “நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு கேட்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக நீங்கள் கூறலாம்.  இதன் மூலம்  தமிழக மாணவர்களின் தரத்தை நீங்கள் குறைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். இந்த நடவடிக்கை அவமானகரமனதாக இல்லையா?.

கோடிக்கணக்கில் பணம் கட்டி மருத்துவம் படிக்கும் மாணவன் எப்படி மக்களுக்கு சேவை செய்வான். முதுகலை படிப்பில் உரிய விதிகளை மருத்துவ கவுன்சில் பின்பற்றவில்லையா?. விதிகளை பின்பற்ற நீங்கள் வற்புறுத்தாமல் கல்வியை வணிகமாக மாற்ற மருத்துவ கவுன்சில் அனுமதித்துள்ளது.

எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல்  இந்த தொழில் நடப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.    தமிழகத்தில் உள்ள அரசு, தனியார்,நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எத்தனை இடங்களுக்கு  மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2016- 17 கல்வியாண்டில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டன.

அப்போது மருத்துவ கவுன்சில் விதிகளின்படி அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டு தகுதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்ற விதிகள்  பின் பற்றப்பட்டதா? . தமிழக அரசு தனியார் கல்லூரிகளிடம் இருந்து பெறப்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்கள் எத்தனை?. உள்ளிட்ட கேள்விகளுக்கு  அரசு பதில் அளிக்க வேண்டும். இந்த   வழக்கு விசாரணையை  ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்.  மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்கிறேன். அவர்களும் பதில் அளிக்கவேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...