ஐகோர்ட்டுக்கு ஆறு புதிய நீதிபதிகள்
பதிவு செய்த நாள்: ஜூன் 14,2017 03:37
சென்னை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, எஸ்.கே.கவுல் இருந்தபோது, வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் மத்தியில் இருந்து, நீதிபதிகள் பதவிக்கு, பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
தற்போது, வழக்கறிஞர்களாக உள்ள அப்துல் குத்துாஸ், தண்டபாணி, ஆதிகேசவலு, ஜெகதீஷ் சந்திரா, சுவாமிநாதன், பவானி சுப்பராயன் ஆகிய, ஆறு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமன உத்தரவில், ஹிந்தி மொழியில், நீதிபதிகளின் பெயர்கள் இடம் பெறும். அதன்படி, ஹிந்தியில் நீதிபதிகளின் பெயர்கள் எழுதப்பட்டு, மத்திய சட்டத்துறைக்கு அனுப்புவதற்கான நடைமுறை, உயர் நீதிமன்றத்தில், நேற்று நடந்தது.
இதற்கிடையே, புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நியமனத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, சில நடைமுறைகளுக்கு பின், இன்னும் சில நாட்களில் வெளியாகலாம். உயர் நீதிமன்றத்தில், தற்போது, 48 நீதிபதிகள் உள்ளனர். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை, 75; புதிய நீதிபதிகள் ஆறு பேர் நியமனத்துக்கு பின், இந்த எண்ணிக்கை, 54 ஆக உயரும்.