தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக, மாநில தேர்தல் கமிஷனர் மாலிக் பெரோஸ்கான்
தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 17, 19 தேதிகளில் நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல், முறையான இடஒதுக்கீட்டுமுறை பின்பற்றப்படவில்லை என்பதற்காக ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் உத்தரவின்படி தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதுதொடர்பாக மாநில தேர்தல் கமிஷனர் மாலிக் பெரோஸ்கான் நேற்று நெல்லையில் ஆய்வு நடத்தினார். அப்போது, கடந்த தேர்தல் அறிவிப்பின் போது போட்டியிட டிபாசிட் செலுத்தியவர்களுக்கு அந்ததொகையை ஜூலை 10க்குள் திருப்பியளிக்கவும், இடஒதுக்கீடு குறைபாடுகளை சரி செய்யவும், வாக்காளர் பட்டியல் தயாராக இருப்பதால் இனி 18 வயது நிறைவு பெற்றோரை புதிதாக சேர்க்க இணைப்பு பட்டியல் தயாரிக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான உபகரணங்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தும் பணியினையும், வாக்காளர் பட்டியல் குறித்தும் மாவட்டந்தோறும் ஆய்வு செய்து வருகிறோம். தற்போது எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்த தயாராக உள்ளோம், என்றார்