தமிழகத்திற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு கோரிய மசோதாவுக்கு,
ஜனாதிபதி ஒப்புதல் பெறக் கோரிய மனு மீதான விசாரணையை, வரும், 28க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
'பொது பள்ளிகளுக்கான மேடை' அமைப்பின் பொதுச் செயலர், பிரின்ஸ் கஜேந்திர பாபு தாக்கல் செய்த மனு: மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவு தேர்வில் விலக்கு கோரி, தமிழக அரசு சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது.ஐந்து மாதங்கள் ஆகியும், இந்த மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பவில்லை.
தமிழக அரசு அனுப்பிய மசோதாவுக்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறும்படி, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும். அதுவரை, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில்கூறப்பட்டுள்ளது.
பரிசீலனைக்கு மசோதா
இம்மனு, நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர், விடுதலை ஆஜராகி, ''பிப்ரவரி மாதமே ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்பட்டு விட்டது. ஐந்து மாதங்கள் முடிந்தும், இன்னும் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு மசோதா வைக்கப்படவில்லை,'' என்றார். இந்த மனு மீதான விசாரணையை வரும், 28ம் தேதிக்கு,'டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்தது.
முதல்வர் நம்பிக்கை
புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, டில்லி சென்ற, தமிழக முதல்வர் பழனிசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: 'நீட் நுழைவுத் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது குறித்து,தமிழக அரசு, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்.
கதிராமங்கலம் போன்ற பிரச்னைகள், இப்போது வந்தவை அல்ல. ஹைட்ரோ கார்பன் பிரச்னை, தி.மு.க., ஆட்சி காலத்திலிருந்தே உள்ளன. கதிராமங்கலமும், இப்போதைய பிரச்னை அல்ல. 2001ம் ஆண்டிலேயே கொண்டுவரப்பட்டு, பல ஆண்டுகளாக, நடைமுறையில் உள்ள திட்டம், அது. விவசாயிகளை பாதிக்க கூடிய, எந்த திட்டத்தையும், தற்போதுள்ள மாநில அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்