மேற்கு அண்டார்டிகாவிலுள்ள பனி அடுக்குகளிலிருந்து டிரில்லியன் டன் எடையுள்ள பனிப்பாறை
பிரிந்து விட்டது.
இப்பனிப்பாறையை பலகாலமாக அறிவியலர் ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணித்து வந்தனர். இறுதியாக அது ஜூலை 10 ஆம் தேதிலியிருந்து 12 தேதிக்குள் பிரிந்து விட்டதை அறிவியலர் அறிந்தனர். இதன் சுற்றளவு 5,800 சதுர கிலோமீட்டர்களாகும். இதற்கு ஏ 68 என்று பெயரிட்டுள்ளனர்.
இதுவரை பிரிந்து வந்த மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றாகும் இது. இதன் போக்கு எப்படியிருக்கும் என்பதும் இதுவரை தெரியவில்லை என்கின்றனர் அறிவியலர். பனிப்பாறை பிரிந்து விட்டதால் லார்சின் சி எனும் பனி அடுக்கில் 12 சதவீத பரப்பு குறைந்திருக்கிறது. இதன் மூலம் இதன் அளவை கணிக்க முடியும்.
”ஒருவேளை அது முழுமையாக ஒரே துண்டாக இருக்கலாம் அல்லது சிதறிப் போகலாம். அவற்றில் சில கடல் பகுதியிலேயே தங்கலாம் அல்லது வடக்கு நோக்கி நகர்ந்து வெப்பமுள்ள பிரதேசத்திற்குள் நுழையலாம்” என்கிறார் ஒரு ஆய்வாளர். இப்பனிப்பாறை அப்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு அதிக சிக்கல்களை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டில் அண்டார்டிகா தீபகற்பத்தில் ஒரு பனிப்பாறையில் மோதி மூழ்கிய எம் டி வி எக்ஸ்ப்ளோரர் எனும் கப்பலில் பயணித்த 150 ற்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றி அழைத்து வந்தனர்.
கடந்த 1995 ஆம் ஆண்டிலும், 2002 ஆம் ஆண்டிலும் இதே போல லார்சன் ஏ மற்றும் பி பனி அடுக்குகளிலிருந்து பனிப்பாறைகள் பிரிந்து சென்றன. இதனால் கடல் மட்டம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இப்போதும் அது போலவே கடல் மட்டம் அதிகரிக்கலாம் என்று கூறுகிறார் பிரிட்டிஷ் ஆய்வாளர் ஒருவர்.
புவி வெப்பமடைதலின் விளைவாக இப்பிரிவு ஏற்பட்டதா என்பதை உறுதியாக கூற முடியாது எனும் அறிவியலர் இது போன்று பனிப்பாறைகள் பிரிவது இயல்பாக நடப்பதே என்கின்றனர். மீண்டும் பனி அடுக்குகளில் பனி சேர்ந்து பனிப்பாறைகள் உருவாகலாம். ஆனாலும் விஞ்ஞானிகளிடையே இக்கருத்தில் ஒற்றுமையில்லை. “எங்களது கணிப்பு மாதிரிகள் பனிப்பாறைகள் நிலையில்லாமல் இருக்கின்றன என்று கூறுகின்றன; ஆனால் மீண்டும் பனிப்பாறைகள் பிரிவது சில ஆண்டுகளிலோ, பத்தாண்டுகள் கழித்தோ நடைபெறலாம்” என்கிறார்பிரிட்டிஷ் ஆய்வாளர்