ஆண்கள் இல்லாத உலகம் எப்படியிருக்கும் என்று பெண்களும்
பெண்கள் இல்லாத உலகம் எப்படியிருக்கும் என்று ஆண்களும் நினைத்து கற்பனை செய்வதுண்டு.
ஆண்கள் இல்லாத உலகம் இப்படித்தான் இருக்கும் என்று மெய்ப்பித்து காண்பித்திருக்கிறார்கள் கென்யா நாட்டில் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் பெண்கள்.
பெண்களை துன்புறுத்தும் ஊர் :
கென்யாவின் வடக்குப் பகுதியில் உள்ள குக்கிராமத்தில் சம்புரு என்ற பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அங்கே பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் வீரர்களும் அவ்வூரில் உள்ள ஆண்களும் அங்கிருக்கும் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியும், அடித்தும் துன்புறுத்தினர்.
சித்திரவதைகளை சந்தித்த பெண்கள் :
தொடர்ந்து இப்படியான பாதிப்புகளுடன் பெண்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்த நிலையில் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனாலும் குற்றம் புரிந்த ஆண்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தவிர, குழந்தைத் திருமணம், பெண்ணுறுப்பு சிதைப்பு, பாலியல் வன்கொடுமை, அடி என பல்வேறு சித்ரவதைகளாலும் பாதிக்கப்பட்டனர்.
பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி :
இவர்களின் குரலாக ஒலிக்க ஆரம்பித்தவர் தான் ரபேகா லோலோசோலி . சம்புரு இனப்பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாங்கள் வாழ ஆண்களின் துணை தேவையில்லை என்று முழங்கினார்.
ரபேகாவின் துணிச்சல் :
தொடர்ந்து போராடி உமொஜா(Umoja)என்ற கிராமத்தை உருவாக்கினார். சம்புரு மக்களின் தாய்மொழியான ஸ்வஹிலி மொழியில் உமொஜா என்றால் ஒற்றுமை என்று அர்த்தமாம். இதனை உருவாக்குவதற்குள் பல்வேறு இன்னல்களை சந்தித்திருக்கிறார் ரபேகா.
வாழ்வாதாரம் :
பெண்கள் மற்றும் ,குழந்தைகள் வசிக்கும் இந்தக் கிராமத்திற்குள் நுழைய ஆண்களுக்கு அனுமதியில்லை. இங்கிருக்கும் பெண்கள், பாரம்பரிய நகைகள் செய்து விற்பதும், இங்கே வரும் பெண் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தையும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
பெண்களை மதிக்கும் சமூகம் :
கல்வி மட்டும் தான் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று சொல்லும் ரபேகாஅதே ஊரில் ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்திருக்கிறார். உமொஜா கிராமத்தை சுற்றியுள்ள பிற கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கே வந்து படிக்கிறாரக்ள். இந்த மாணவர்களை எல்லாம் பெண்களை மதிக்கும் சமூகமாக உருவாக்க வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசையாம்.
