அரசு நிர்ணயித்ததை விட அதிகமாகக் கட்டணம் வசூலித்த 449 தனியார் பள்ளிகள்
, பணத்தைப் பெற்றோர்களிடம் திரும்ப செலுத்தாவிட்டால் , கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி அரசு நேற்று ( ஆகஸ்ட் 18) எச்சரித்துள்ளது.
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கடந்த 2009 ஆம் ஆண்டு பெற்றோர்கள் டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் நீதிபதி அனில் தேவ் சிங் தலைமையில் நியமிக்கப்பட்ட ஒரு குழுவால் அதிக கட்டணம் வசூலித்த 449 தனியார் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டன. பெற்றோருக்கு 9 சதவிகித வட்டியுடன் கட்டணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. ஆனால், பள்ளிகள் கட்டணத்தை திரும்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், தனியார் பள்ளிகள் நமது கல்விமுறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அரசு அவர்களது செயல்பாட்டில் தலையிட விரும்பவில்லை. ஆனால், பொறுப்பான அரசாங்கமாக இருந்து இந்த பள்ளிகளில் ஒழுங்குமுறையை உறுதி செய்வது அவசியம்.
இந்த பள்ளிகளில் சில பள்ளிகள் நல்லபடியாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், நீதிபதி அனில் தேவ் குழுவின் பரிந்துரைகளை அவர்கள் செயல்படுத்தாவிட்டால், இறுதியாக அந்தப் பள்ளிகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை நேரிடும். இருப்பினும், குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக அந்த பள்ளிகளின் நிர்வாகங்களுக்குத் தகவல் அனுப்ப நாங்கள் உத்தேசித்துள்ளோம் என எச்சரித்துள்ளார்.
அதேசமயத்தில், குழுவின் பரிந்துரைகளில் குறைகள் உள்ளதாகப் பல பள்ளிகள் தெரிவித்துள்ளன. நீதிபதி அனில் தேவ் குழுவினால் செய்யப்பட்ட கணக்கீடு தவறானது என 25-30 பள்ளிகளில் இருந்து புகார் வந்துள்ளன என அரசு உதவிபெறாத தனியார் பள்ளி கூட்டமைப்பின் தலைவர் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசாங்கத்தின்படி தனியார் பள்ளிகள் பெற்றோர்களுக்கு 300 கோடி ரூபாய் திரும்ப கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.