திண்டுக்கல்: ’கூகுள்’ இணையதளத்தில் கிராமம் இடம் பெறாததால்,
பள்ளிக்கூடம் துவக்க வழியில்லை’ என கூறியதால், மலை கிராம மக்கள், திண்டுக்கல் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, கூக்கால் ஊராட்சியைச் சேர்ந்தது பெருங்காடு, கோம்பை, கணேசபுரம் அளந்துரை பகுதிகள். இப்பகுதியில் வசிப்போரில், பெரும்பாலோர் ஆதிவாசிகள்.சில ஆண்டுகளுக்கு முன் எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம் பெருங்காட்டில் இணைப்பு பள்ளி நடத்தப்பட்டது. கட்டட வசதி இல்லாததால் இப்பள்ளி மூடப்பட்டது.
இங்கு படித்த குழந்தைகள் படிப்பை பாதியில் கைவிட்டனர்.இந்நிலையில் பெருங்காட்டில் சி.எஸ்.ஆர்., (கார்பரேட் நிறுவனங்களின் சமுதாய பணி) திட்டத்தில் 2 ஆண்டுகளாக தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி நடத்தப்பட்டது.
44 குழந்தைகள் படித்தனர். தொண்டு நிறுவனத்தின் சேவை கடந்த ஜூனில் முடிந்தது. இதனால் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இப் பகுதி பொதுமக்கள் மற்றும் ஆதிவாசிகள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கொடுத்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
தங்கள் கிராமத்திற்கு அரசு பள்ளி அமைக்க வலியுறுத்தி கல்வித்துறைக்கு பலமுறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது பெருங்காடு கிராமம் ’கூகுள்’ இணைய தளத்தில் இல்லை. இதனால் அரசு பள்ளி அமைக்க இயலாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், என்றனர். இணைய தளத்தில் கிராமமே இல்லை என்றதால் மாவட்ட அதிகாரிகளும் திகைப்பில் உள்ளனர்