இந்தியப் பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைப்புக்கு மத்திய அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 23, புதன் கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வங்கிகள் இணைப்புக்கான வரைமுறையை வகுப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் 21 பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றன. இவை கடுமையான வாராக் கடன் பிரச்னைகளால் தவித்துவருகின்றன. மத்திய நிதியமைச்சக முதன்மைப் பொருளாதார ஆலோசகரான சஞ்சீவ் சன்யால், பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 10 முதல் 15 வரையில் குறைக்கப்பட வேண்டும் என்று கடந்த 21ஆம் தேதி தெரிவித்திருந்தார். வங்கிகள் இணைப்பு குறித்து, மேலும் அவர் கூறுகையில், “வர்த்தக ரீதியில் இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். கடந்த 2016-17 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ.81,683 கோடியை தங்களது வாராக் கடன் கணக்குகளிலிருந்து நீக்கின. அதேபோல, 2015-16 நிதியாண்டில் இந்த மதிப்பு ரூ.57,586 கோடியாக இருந்தது. ஆனால் 2015-16 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ஈட்டிய வருவாய் ரூ.474 கோடி மட்டுமே” என்று கூறினார்.
வாராக் கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன்படி கடன் வசூல் கொள்கைகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. மேலும், திறனிருந்தும் கடனைத் திருப்பிச் செலுத்தாதோர் விவரங்களை வெளியிடவும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.