கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா???

பகுதி - 6 :
ஓய்வூதிய உரிமைப் பறிப்பில் மத்திய அரசுகள்

1991-ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் நிதியமைச்சரான, (பன்னாட்டு நிதியத்தின் உயர் பொறுப்பில் இருந்த) முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன்சிங் அவர்களால்  புதிய பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் புகுத்தப்பட்டது. அதன் விளைவாகத் தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயத்தின் ஓட்டத்திற்கு இந்தியாவும் தள்ளப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக உலக வங்கியின் அறிக்கையின் அடிப்படையில்,  1999-ல் மத்தியில் இருந்த BJP தலைமையிலான மத்திய அரசு ஓய்வூதிய திட்டத்தில் சீர்திருத்தம் குறித்து ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்காக மூன்று குழுக்களை அமைத்தது.

UTI-ன் முன்னாள் தலைவர் திரு.S.A.தவே தலைமையில் 10 நபர்கள் அடங்கிய முதல் குழு “*மூத்தோர் சமூக வருவாய்ப் பாதுகாப்புத் திட்டம்*" *(Old Age Social Income Security Project) என்ற OASIS* அறிக்கையினை 11.01.2000-ல் அன்றைய மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் திருமதி.மேனகா காந்தியிடம் அளித்தது.

இரண்டாவது குழு, காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத் (IRDA) தலைவரான திரு.ரங்காச்சாரி தலைமையில் “*முறைசாராத்துறையில் ஓய்வூதியச் சீர்திருத்தங்கள்*"   *(Pension Reforms in Unorganized Sectors)* என்ற தலைப்பில் தனது அறிக்கையை 2001-ல் மத்திய அரசிடம் அளித்தது.

மூன்றாவதுகுழு *மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய சீர்திருத்தங்ளை*”ப் பரிந்துரைப்பதற்காகக் கர்நாடக முன்னாள் தலைமைச் செயலாளர் திரு.B.K.பட்டாச்சார்யா தலைமையில் அமைக்கப்பட்டு 2002 பிப்ரவரியில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

உலக வங்கி கூறிய திட்டங்களில், இந்திய அரசு முதல் திட்டமான அனைவருக்குமான கட்டாய ஓய்வூதியத் திட்டத்தினைச் செயல்படுத்தாமல் அனைத்து ஓய்வூதிய திட்டங்களையும் தனியாரிடம் விடவேண்டும் என்ற பரிந்துரையினை மட்டும் செயல்படுத்தும் விதமாக, 2001-02 மத்திய பட்ஜெட்டில் ஓய்வூதியச் சுமையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் ஓய்வூதியம் வழங்கும் முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுமென  அரசின் கொள்கை முடிவாக முதன் முதலில் பாராளுமன்றத்தில் அறிவித்தது.

OASIS மற்றும் பட்டாச்சார்யா குழு(1&3)-வின் பரிந்துரைப்படி ஓய்வூதியத்தில் சீர்திருத்தம் செய்யும் பொருட்டு,

*1. வரையறுக்கப்பட்ட பயனளிப்புத் (DEFINED BENEFIT) திட்டம் என்பதற்குப் பதிலாக வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் (DEFINED CONTRIBUTION) திட்டம் என்பதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியது.*

*2. சமூக உதவி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பதிலாக தனிநபர் சமூகக் காப்பீட்டுத் திட்டங்கள் முன்மொழியப்பட்டன.*

*3. சமூகப் பாதுகாப்பிற்கான நிதிகளை, அரசு மற்றும் பொதுப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, பங்குச்சந்தையில்  முதலீடு  செய்து அதன் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க அரசினை வலியுறுத்தியது.*

அதனைத் தொடர்ந்து பா.ஜ.க-வின் 2002-03 மத்திய பட்ஜெட்டில் 2003 அக்டோபர் முதல் பணியில் சேரும் அனைத்து மத்திய அரசு ஊழியருக்கும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

*பாதுகாப்புத்துறையில் பணிபுரிபவர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பாதுகாப்புத்துறையில் பணிபுரியும் படைவீர்களுக்கு மட்டும் இப்புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.* (பாதுகாப்புத்துறையில் ஓய்வு பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது பணிபுரிபவர்களின் மொத்த எண்ணிக்கையை விட 10% அதிகம் - OASIS Report)

இதனைத் தொடர்ந்து 22.12.2003-ல் வெளியிடப்பட்ட மத்திய அரசின் நிதித்துறை அறிவிப்பு மூலம் 01.01.2004 முதல் மத்திய அரசுப்பணியில் சேரும் அனைத்து வகை பணியாளருக்கும் (பாதுகாப்புப் படைவீரர்கள் தவிர்த்து) இந்தப் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

இதன்பின் 2004-ல் மத்தியில் ஆட்சியமைத்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1, ஊழியர்களின் நலன்களை தனியாரிடம் அடகு வைப்பதில் பா.ஜ.க-வின் பொருளாதாரக்கொள்கை மற்றும் தனியார்மயமாக்கல் முடிவினைப் பின்பற்றி, புதிய ஓய்வூதியத் திட்டத்தினைத் தீவிரமாய் நடைமுறைப்படுத்தியது.

அவசரச் சட்டங்களுக்குப் பாராளுமன்ற தற்காலிக ஒப்புதல் தேவை இல்லை என்பதால், 29.12.2004-ல் மத்திய அரசு இடைக்கால PFRDA அவசரச் சட்டத்தை நிறைவேற்றி, அதன்பின் 12.02.2005-ல் நிதியமைச்சர் ப.சிதம்பரம் PFRDA மசோதாவினைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பின்னர் இம்மசோதாவினை ஆராய்வதற்காகப் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அதில் சில மாற்றங்களை 14.11.2008-ல் செய்தனர். அவ்வாறு மாற்றங்கள் செய்த பின்பும் இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படவில்லை.

அதன்பின் மீண்டும் 3-வது முறையாக மக்களவையில் 18.03.2011-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 (15வது பாராளுமன்றம்) ஆட்சியில், முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.பிரணாப்முகர்ஜி நிதியமைச்சராக இருந்த போது PFRDA மசோதாவினைத் தாக்கல் செய்தார்.

அப்போது இடதுசாரி மக்களவை உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் குரல் வாக்கெடுப்பின்றி விவாதம் செய்து அதன் மீது வாக்கெடுப்பு நடத்திய பின்புதான் மசோதாவினை அறிமுகம் செய்ய வேண்டும் என்று கூறி வாக்கெடுப்பு நடத்தக் கோரினார்.

இம்மசோதா அறிமுகத்தின் மீதான வாக்கெடுப்பின்போது,

★காங்கிரஸ் மற்றும் BJP கட்சிகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ஆதரித்து வாக்களித்தன.

★இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன.

★அன்றைய தமிழகத்தின் எதிர்கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு அரசியல் எனும் தொனியில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 2011-ல் எதிர்த்த இத்திட்டத்தை 2004-லேயே முன் தேதியிட்டு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியது இதே அ.இ.அ.தி.மு.க தலைமையிலான அரசு தான்.

துரோக முகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தப்படும் . . .

நன்றி : cpstamilnadu.blogspot.com

திண்டுக்கல் எங்கெல்ஸ்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...