திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப்
போராட்டம் நடைபெறும்’ என அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ–ஜியோ, ‘ஊழியர்களைப் பாதிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். மாநில அரசின் எட்டாவது ஊதியக்குழு மாற்றங்களை, உடனடியாக கொண்டுவர வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும். மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள்படி மாநில அரசின் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்முன், 20 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்’ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை நடத்திய நிலையில், ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது. இதில், ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்குகொள்கின்றனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குப் பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்றும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி தமிழக அரசு சார்பில் நேற்று (ஆகஸ்ட் 18) சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையைத் தலைமைச் செயலர் திரும்பப்பெறக் கோரி தலைமைச் செயலக ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “போராட்டக்களத்தை பிசுபிசுக்க இதுபோன்ற அறிக்கைகளைப் போராட்டத்துக்கு ஒருநாள் முன்பாக வெளியிடும் அரசு, தற்போது ஐந்து நாள்களுக்கு முன்னதாகவே வெளியிட்டுள்ளது. இதை ஜாக்டோ-ஜியோ அமைப்புக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருத வேண்டும். தலைமைச் செயலரின் நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
