காஷ்மீரில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு சீன மருத்துவக் கல்லூரிகள் அங்கு
விளம்பரம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா - சீனாவுக்கிடையே எல்லையோர பிரச்சினை சற்றே தணிந்துள்ள நிலையில், சீனாவின் மருத்துவ கல்லூரிகள் தொடர்பான விளம்பரங்கள் காஷ்மீர் நாளிதழ்களில் இடப்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காஷ்மீரிலுள்ள ஃபயாஸ் சர்வதேச ஆலோசனை மையத்தின் ஆலோசகர் ஃபாதிமா ஜான் 'தி இந்து' (ஆங்கிலத்திடம்), “சீனாவைச் சேர்ந்த சுமார் 90 மருத்துவ கல்லூரிகள் குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பு பயில காஷ்மீர் மாணவர்களை அணுகி வருகின்றன.
காஷ்மீரைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் சீனாவிலுள்ள ஹெபி மருத்துவ கல்லூரிகளில் நாங்கள் சேர்த்துள்ளோம். மாணவர்களிடமிருந்து மருத்துவ படிப்பு கட்டணமாக ரூ.11 லட்சம் பெறப்பட்டுள்ளது.
சீன மருத்துவக் கல்லூரிகள் நவீன தரமான தொழில் நுட்பங்கள் மூலம் பயிற்சி தருகின்றன. படிப்பு முடிந்த பிறகு அமெரிக்கா மற்றும் லண்டனுக்கு மாணவர்களை எளிதாக அனுப்புகின்றன. சீன மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு தொடர்ந்து சேர்க்கை நடந்து கொண்டு இருக்கிறது. நிறைய மாணவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.
சீனாவை பொறுத்தவரை அங்கு மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் என்பது குறைந்த அளவிலேயே மாணவர்களிடமிருந்து பெறப்படுகிறது. அதுமட்டுமில்லாது வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவி தொகைகளையும் சீன மருத்துவ கல்லூரிகள் வழங்குகின்றன.
கசகஸ்தான், ஜார்ஜியா, கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளும் மருத்துவப் படிப்பு சேர்க்கைகாக காஷ்மீர் மாணவர்களை அணுகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
_________________________________________________________