மருத்துவக் கலந்தாய்வுக்கான தகுதி பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில்
தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 24 முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் போலி இருப்பிட சான்றிதழ்களை சமர்ப்பித்து கேரளாவைச் சேர்ந்த 7 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இவர்களில் மூன்று மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி விக்நயா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு தகுதி பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களும் தமிழக பட்டியலில் அதிக அளவு இடம் பெற்றிருக்கின்றனர். எனவே இந்த தகுதிப் பட்டியலை ரத்து செய்து, புதிய தகுதிப் பட்டியலை வெளியிடுமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர்-1) நீதிபதி ரவிச்சந்திரபாபு, அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதால் இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டார்.
