கொசுக்கள் பெருக்கத்துக்குக் காரணமாக இருப்பவர்களுக்குச்
சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான மசோதாவுக்கு அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடக்கிறது. ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை அதிநவீன கட்டமைப்புடன் அம்மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கொசுக்கள் குறித்து அம்மாநில அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி அவற்றை ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதற்குச் சுற்றுப்புறச் சீர்கேடு, மக்களின் அலட்சியப் போக்கு ஆகியவை காரணமாக இருக்கின்றன.
வீடுகள், கடைகள், உணவங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள தள்ளுவண்டிகளின் அருகில் குப்பை, கழிவு நீர், குப்பைக் கூளங்கள் போன்றவை தேங்குவதற்குக் காரணமானவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியானால், தினசரி, ரூ.100 அப்பகுதி மக்களிடம் அபராதமாக வசூலிக்கப்படும். அதற்குப் பின்னும், அதேநிலை தொடர்ந்தால் ஒரு மாத சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று அந்த மசோதா கூறுகிறது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது, பெரும்பாலான நோய்கள் கொசுகள் மூலமாகவே மனிதர்களுக்குப் பரவுகின்றன. அவ்வாறு பரவும் நோய்களுக்குப் பலரும் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில் கொசுவை ஒழிப்பதற்கான கடுமையான முயற்சியைச் சட்டத்தின் துணையோடு ஆந்திர அரசு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது உரிய பலனைப் பெற்றுத்தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.