அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதியம்!!!

நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு, அரசு
ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (டிசம்பர் 2) ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்களின் பசியைத் தணிப்பதில் முக்கியப் பங்காற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மிகவும் குறைவாக உள்ளது. இதை உயர்த்தித்தர வேண்டும் என்று 22 ஆண்டுகளாக எழுப்பப்படும் கோரிக்கைகளை அரசு ஏற்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்கள் பணியிலிருந்த போது வாங்கிய ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு அதே முறையில் ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1600 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதுவும் 1995-ஆம் ஆண்டு முதல் தான் இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதற்கு முன் நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோரின் நிலை இன்னும் மோசமாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "தமிழ்நாடு மின்வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகம், வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னைக் குடிநீர் வாரியம், பாடநூல் நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களைப் போலவே நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்ட போதெல்லாம், நுகர்பொருள் வாணிபக்கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் அது சாத்தியமில்லை என்று கூறி தமிழக அரசு நிராகரித்து வருகிறது" என்றும் தனது அறிக்கையில் விளக்கம் கூறியுள்ளார்.

தொடர்ந்து, "மக்களுக்காக அரசு நிர்வாகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாதம் ரூ.1600 ஓய்வூதியம் வழங்குவது எந்த வகையில் சரியாக இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து நுகர்பொருள் வாணிபக்கழகப் பணியாளர்களுக்கும், மற்ற பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...