வேலூர் மாவட்டத்தில் அங்கீகார விதிகளை மீறிய 18 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் 660 சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட, நாடு முழுவதும் 18,000 பள்ளிகள் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் இணைப்பு பெற்று தேர்வு எழுத அனுமதி பெறுகிறது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்துத் தனியார் பள்ளிகளும் மாநில அரசு அங்கீகாரத்துடன்தான் செயல்பட வேண்டும் என்றும், இதை மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற வேண்டும் எனக் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 42 சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. இதில் 18 பள்ளிகள் மாநில அரசு அங்கீகாரம் இல்லாமல் இயங்குவது தெரியவந்தது. எனவே, இந்த 18 பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேலூர் மாவட்ட சிஇஓ மார்ஸ், “சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, மாநில அரசின் அங்கீகாரத்தை மூன்று மாதத்துக்குள் பெற வேண்டும். இல்லையெனில், பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
