தமிழக அரசின் இலவச நீட் தேர்வு பயிற்சிக்குப் பள்ளிக்கு ஒரு மாணவரைத் தேர்வு செய்யச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காகப் பயிற்சி அளிக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவித்தார். அதன்படி, ‘தொடு வானம் இலவச நீட் தேர்வு பயிற்சி மையம்’ மூலம் அரசுப் பள்ளி தமிழ் வழி மாணவர்களுக்கு திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், ஆங்கில வழி மாணவர்களுக்கு சென்னை, ஈரோடு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 25 நாட்கள் இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில், சேர்வதற்காகப் பள்ளிக்கு 5 மாணவர்கள் வீதம் தேர்வு செய்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்களுக்கு முதலில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஆனால், பள்ளிக்கு ஒருவரைத் தேர்வு செய்து அனுப்பினால் போதும், எனத் தற்போது கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நீட் பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடிப் பயிற்சி அளிக்கப்படும். மீதமுள்ள 6,000 மாணவர்களுக்கு மின்னணு முறையில் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேரடிப் பயிற்சி பெறும் 2,000 மாணவர்கள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் 25 நாட்கள் தங்கியிருந்து நீட் தேர்வுக்குப் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்குத் தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
