அனுமதி பெறாமல் நடத்தப்படும் சிபிஎஸ்இ பள்ளி முன்பு அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் பள்ளி என்று வளாகம் முன்பு மாநில அரசு பதாகை வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர பாண்டியன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். திருத்துறைப்பூண்டியில் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றதாக கூறி எஸ்.வி.எஸ். இன்டர்நேஷனல் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் ப்ரீ கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ளது.
இப்பள்ளியின் கட்டடங்கள் எந்த அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என்றும் பள்ளி சிபிஎஸ்இ அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படுகிறது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2017ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளிக்கப்பட்டு, சிபிஎஸ்இயால் அங்கீகாரம் பெறாதது என்றும் மாநில அரசிடம் தடையில்லா சான்றிதழும் பெறப்படவில்லை என்றும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்ட பின்னர், மாநில அரசின் அனுமதி பெறாமல் நடத்தப்படும் எஸ்.வி.எஸ். இன்டர்நேஷனல் பள்ளியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தப் பள்ளியை மூட உத்தரவிட முடியாது எனவும், பள்ளி வளாகத்துக்கு முன்பாக சிபிஎஸ்இயால் அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் பள்ளி என்றும் பதாகை வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
