அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் முதுநிலை மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மார்ச் 22 ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் அனைத்து மருத்துவர்கள் சங்கங்களும், மருத்துவ மாணவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார்கள்.
கோரிக்கைகள்:
>>முதுநிலை மருத்துவக் கல்வியில், அகில இந்தியத் தொகுப்பில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
>>முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கும் அதிகாரத்தையும், கூடுதல் மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தையும் மத்திய-மாநில அரசுகளுக்கே வழங்கிடும் வகையில் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் திருத்தத்தை செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
>>தமிழக அரசு மருத்துவர்களுக்கு, மத்திய அரசின் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு மற்றும் சலுகைகளை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
>>தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
>>மத்திய அரசு, தேசிய உரிமத் தேர்வை ( NLME) திணிப்பதை கைவிட வேண்டும்.
சமூக சமத்துவத்திற்கான டாகடர்கள் சங்கம், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் நலச் சங்கம், DNB டாக்டர்கள் சங்கம், சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் மருத்துவ மாணாக்கர் பிரிவு ஆகிய மருத்துவ சங்கங்களும், மாணவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
