திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை. அரசுப் பேருந்துகளைப் போலவே இன்னமும் பல மலைக் கிராமங்களுக்குச் சென்று சேராமலே இருக்கிறது கல்வி. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் மனநிலையும் பெற்றோரிடம் இல்லை. இந்தச் சூழலை மாற்றும் அக்கறையுடன் தன் ஆசிரியப் பணியைத் தகவமைத்துக்கொண்டார் மகாலட்சுமி. குருவாக மட்டுமல்லாமல், மாணவர்களின் கூட்டாளியாக, கோமாளியாக, தோழியாக மாறி, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டமாகக் கற்பித்து
வருகிறார். ஆரோக்கியம் காக்கும் வகையில் மாணவர்களுக்கு முடி வெட்டிவிடுவது, குளிப்பாட்டிவிடுவது ஆகியவற்றையும் செய்கிறார். சிறப்புக் குழந்தைகளுக்கும் தனிக்கவனம் தருகிறார். மலையேறாத கல்வியை மலைக்கிராம மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, ஆசிரியப் பணியை அர்ப்பணிப்புடன் செய்துவருகிறார் மகாலட்சுமி.