தெலங்கானா மாநிலத்தில் எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் இன்று (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் 17 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் சுமார் 85 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் மாதந்தோறும் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை மானிய விலையில் வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு சில காரணங்களுக்காக வேறு மாவட்டங்களுக்குக் குடிபெயர்ந்து செல்லும்போது அங்குள்ள கடைகளில் ரேஷன் பொருள்களை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. அவ்வாறு வீடு மாறி செல்வோர், அந்த விவரத்தை, உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் தெரிவித்து, முகவரி மாற்றம் செய்ய வேண்டும். அங்கு தரும் சான்றை, புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கி, பொருள்களை வாங்க முடியும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு புதிய திட்டத்தைச் சோதனை முறையில் மாநில அரசு செயல்படுத்தியது.
தலைநகர் ஹைதராபாத்தில் மக்கள் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் மட்டுமின்றி அம்மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ள மற்ற ரேஷன் கடைகளில் இருந்தும் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த நினைத்த அரசு இதை ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.
இதன்மூலம் ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கிப் பயன்படுத்தும் சுமார் 2.75 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என அம்மாநில உணவுப்பொருள் பங்கீட்டுத் துறை ஆணையர் சி.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
